அதிமுக ஆலோசனைக் கூட்டமும்... பின்னணியும்... மனம் விட்டு பேசப்போவது இதைப்பற்றித்தான்..!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக மூத்த முன்னோடிகள் பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, தேர்தல் கூட்டணி ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து மனம் விட்டுப் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வரதட்சணை வழக்கில் இனி 10 ஆண்டு சிறை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
அதிமுக அலுவலகம்
பல மாதங்களுக்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. லாயிட்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் காலை முதலே ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் வரவுள்ளதால் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.
என்ன ஆலோசனை?
கொரோனா பரபரப்புக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கான காரணம் பற்றி நாம் விசாரித்ததில் இரண்டு முக்கிய விவகாரங்கள் பற்றி தகவல் தெரிந்தது. தேர்தல் கூட்டணி, அதிமுக பொதுக்குழு, இவை இரண்டு குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைத்து திமுகவை பலவீனம் அடையச் செய்ய வேண்டும் என்ற டார்கெட் பற்றி இன்று ஆலோசிக்கப்பட இருக்கிறது.
திமுக பாணியில்
சசிகலா விடுதலை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அவரது வருகைக்கு முன்பாகவே பொதுக்குழுவை நடத்தினால் என்ன என்ற முடிவுக்கு வந்துள்ளது அதிமுக தலைமை. சசிகலா விடுதலைக்கு முன்பு அதிமுக பொதுக்குழுவை நடத்திவிடலாம் என அமைச்சர்களில் ஒரு தரப்பினர் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகின்றனர். மேலும், திமுக பாணியில் காணொலி மூலம் பொதுக்குழுவை நடத்தினால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும் என்பது கே.பி.முனுசாமி போன்ற மூத்த நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
இன்று முடிவு
இதனிடையே முதலமைச்சர் வேட்பாளர் பற்றி இன்று விவாதிக்க வாய்ப்பு குறைவு எனத் தெரிகிறது. இந்த விவகாரத்திற்கு கூட்டறிக்கை மூலம் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் அதனை மீண்டும் கிளர விரும்பவில்லை இ.பி.எஸ்.தரப்பு. பொதுக்குழு, கூட்டணி, இவை இரண்டு குறித்தும் மனம் விட்டுப் பேசி முடிவெடுப்பதற்காகவே இன்றைய தினம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.