போலீஸ் கஸ்டடியில் மாணவர் மணிகண்டன், விழுப்புரம் உலகநாதன் மரணம்- போலீஸுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்
சென்னை : போலீசார் தாக்கியதால் இராமநாதபுரத்தில் மணிகண்டன் மற்றும் விழுப்புரம் உலகநாதன் ஆகியோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சய் உடன் மாலை 4.30க்கு முதுகுளத்தூர் வந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மாணவனை விரட்டிப்பிடித்து போலீஸார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

போலீசார் அடித்துக் கொலை என புகார்
இதனையடுத்து காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்தவாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வ்டிட்டரில் ட்ரெண்டான #JusticeForManikandan
இந்நிலையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.பாஜக அண்ணாமலை, அமமுக தினகரன் உள்ளிட்டோர் மணிகண்டனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் மணிகண்டனின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

காவல்துறைக்கு ஓபிஎஸ் கண்டனம்
இதனிடையே காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் முதுகுளத்தூர் மணிகண்டன் மற்றும் விழுப்புரம் உலகநாதன் ஆகியோர் மரணத்திற்கு தமிழக காவல்துறையில் மெத்தனப்போக்கே காரணம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ் நாட்டில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாகவும், மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது இந்த சூழ்நிலையில் ராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வியெழுப்பு ஓ.பி.எஸ்.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் நல்ல நிலையில் தான் இருந்தார் என்றால் காவல்துறையினரால் துன்புறுத்தப்படவில்லை என்றால் அவருடைய பெற்றோர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அழைத்துச் செல்லுமாறு கூறியது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஓபிஎஸ் உறவினர்கள் கூறுவதுபோல் மணிகண்டன் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு காவல் நிலையத்தில் என்ன நடந்தது? மணிகண்டனின் நண்பரை அழைத்து காவல்துறை விசாரணை நடத்தியதா? மணிகண்டனின் இறப்பிற்கு காரணம் என்ன? போன்ற சந்தேகங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன எனவே மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

காவல்துறையின் மெத்தனப்போக்கு
இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்ற விவசாயி அவரது மனைவியுடன் நேற்று தனக்குச் சொந்தமான நிலத்தில் டாஸ்மாக் மதுக்கடை அருகே கட்டிலில் சுண்டல் போண்டா போன்ற ஆகியவற்றை விற்பனை செய்த போது காவல்துறையினர் தடுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வில் உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்த செய்திகளை குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் இந்த இரு நிகழ்வுகளுக்கும் காவல்துறையினரின் மெத்தன போக்கே காரணம் என்பது செய்திகளைப் படிக்கும்போது கண்கூடாக தெரிகிறது எனவும் காவல்துறையினர் போக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

முதல்வர் தலையிட வேண்டும்
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு மணிகண்டன் மற்றும் உலகநாதன் ஆகியோர் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், இதுபோன்ற உயிரிழப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க ஆவன செய்ய வேண்டும்" என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்