பரபர அதிமுக கூட்டம் ஓவர்.. உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசனை.. உட்கட்சி மோதல் குறித்தும் விறுவிறு!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்தது
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் மிகுந்த ஆர்வத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்திய அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்து முடிந்தது. ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ராஜன் செல்லப்பா சொன்னதில் இருந்தே, யார் அந்த ஒற்றை தலைமை என்ற பரபரப்பு தமிழக அரசியலை தொத்தி கொண்டது.
அதனால் இன்று நடக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது சம்பந்தமாக ஏதாவது பேசக்கூடும் என்றும், அல்லது ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
எந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை!
தலைமை
அதன்படியே கூட்டமும் காலை 10 மணிக்கு சரியாக தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள்
இந்த கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் தம்பிதுரை, பொன்னையா, வளர்மதி, வைகைச்செல்வன், வைத்திலிங்கம், செம்மலை, கோகுல இந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மற்றும் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் சேவூர் ராமச்சந்திரன், எம்ஆர் விஜய பாஸ்கர், மணிகண்டன் காமராஜ், செல்லூர் ராஜூ, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்வி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, அன்பழகன், எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்கவில்லை
முக்கியமாக ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை ஆரம்பித்து வைத்த ராஜன் செல்லப்பாவும் இதில் கலந்து கொண்டார். ஓஎஸ் மணியன், சிவி சண்முகம் மற்றும் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் தவிர பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்காததால், அவர்கள் 3 பேருமே இதில் பங்கேற்கவில்லை.
காரசார விவாதம்
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை சரியாக 10.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிவரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யார் என்ன பேசினார்கள், எந்த விதமான நிலைப்பாட்டை முன்னெடுத்து வைத்தார்கள் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. மேலும் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அதில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்றும் கூட்டத்தில் உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
எனினும் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் கடுமையாக, காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக மட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லை.. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாடுகள்
இப்படித்தான், ராஜன் செல்லப்பா அன்று சொன்ன ஒற்றை தலைமை வேண்டும் என்ற பேட்டி குறித்து யாருமே, எந்த நிர்வாகியும் கருத்து சொல்ல கூடாது என்று அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இப்போது திரும்பவும் கட்சி தலைமை இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளதால், இதனை நிர்வாகிகள் எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்து கொண்டு செயல்படுவார்கள் என்பது தெரியவில்லை.
கூட்டம் நிறைவு
இருந்தாலும், அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சத்தமே இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இந்த அமைதி தமிழக அரசியலில் புயலை கொண்டு வரப்போகிறதா, அல்லது சுமூக முடிவுக்கு வரப்போகிறதா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்.