வரப்போகும் சசிகலா.. எடப்பாடியாரின் விருப்பம் நிறைவேறுமா? இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா சிறையில் இருந்து வர உள்ளது பற்றியும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளது. தற்போது சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் குணம் அடைந்த பின்னரே வீடு திரும்புவார் என தெரிகிறது.
சசிகலா விடுதலையாகும் நாள் நெருங்கியுள்ள இந்த சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா, பாஜகவுக்கான தொகுதி ஒதுக்கீடு, சசிகலா விடுதலை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் அறிவுறுத்தல்
ஜனவரி 27-ம் தேதியன்று நடைபெறும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை மிகபிரமாண்டமாக நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை தருவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திறப்பு விழா கூட்டம்
ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவை வரவேற்க ஒசூருக்கு செல்லும் கூட்டத்தை காட்டிலும் சென்னை மெரினாவில் நடைபெறும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கான கூட்டம் தான் பெரியளவில் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியார் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இன்று நடக்கும் நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசலாம் என தெரிகிறது.
தொகுதி பங்கீடு
இவை தவிர சட்டமன்ற தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு, மாவட்ட வாரியான அரசியல் கள நிலவரங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா வருகைக்கு முன்பு நடைபெற உள்ள இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.