சசிகலா ரிலீஸ் ஆன பின்னர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா
சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகப்போகிறார் என்ற செய்தி வெளியான நாளில் இருந்தே அதிமுக கூடாரம் பரபரக்க ஆரம்பித்து விட்டது.
சென்னை : பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகப் போகிறார். இன்னும் சில நாட்கள்தான் அப்புறம் பாருங்க எங்க ஆட்டத்தை என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். சசிகலா விடுதலைக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க மாட்டார் என்று ஸ்டாலின் கிலி கிளப்பி வருகிறார். இப்போது மட்டுமல்ல ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகும் எனது தலைமையிலான ஆட்சிதான் நடைபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் முதல்வர் பழனிச்சாமி. சிறை சென்ற சசிகலா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்றாலும் கட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறாராம்.
Recommended Video
எனது காலத்திற்குப் பிறகும் 200 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்று சட்டசபையில் சபதம் செய்தார் ஜெயலலிதா. அவரது மரணத்திற்குப் பிறகு முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் சசிகலா.
அதோடு நிற்காமல் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற ஆசையில் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். இதனையடுத்து ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்து மவுன யுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.
உடைந்த அதிமுக
அதிகார போட்டியில் கட்சி உடைந்தது. சசிகலா தலைமையில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் செல்ல, ஓ.பன்னீர் செல்வம் பக்கம் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே சென்றனர். முதல்வர் கனவில் மிதந்த சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செக் வைத்தது. கோட்டைக்கு முதல்வராக போக ஆசைப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போனார்.
இணைந்த கைகள்
சிறை செல்லும் முன்பாக எம்எல்ஏக்கள் ஒன்று கூடி எடப்பாடிபழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். கூவாத்தூர் ரிசார்ட்ஸ்சில் நடந்த கலாட்டாக்களை அத்தனை எளிதாக யாரும் மறந்து விட முடியாது. சசிகலா சிறைக்கு போன சில மாதங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக இணைந்தனர். டிடிவி தினகரன் தனித்து விடப்பட்டார்.
டிடிவி தினகரன் கட்சி
சசிகலாவின் ஆசியுடன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்தார் டிடிவி தினகரன். அவரை நம்பி அவரது பின்னால் சென்ற எம்எல்ஏக்கள் ஒருவர் கூட ஜெயிக்கவில்லை. பணத்தையும் பதவியையும் இழந்ததுதான் மிச்சம். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்தை தீவிரமாக எதிர்த்த செந்தில் பாலாஜியும், தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்து தங்களின் பணத்தை பாதுகாத்துக்கொண்டனர்.
அதிமுகவில் நோ சான்ஸ்
நான்கு ஆண்டுகால சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்னும் சில நாட்களில் விடுதலையாகப் போகிறார். அவரது விடுதலை உறுதியாகிவிட்டது. சசிகலாவை அதிமுகவில் எப்போதும் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டார் முதல்வர் பழனிச்சாமி.
அதே நேரத்தில் சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் சில மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளதாக மன்னார்குடி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
சசிகலாவின் சதுரங்க விளையாட்டு
அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும் இணைய வேண்டும் என்று சசிகலா விரும்புகிறாராம். மாவட்ட செயலாளர்கள், தங்களை நம்பி வந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறாராம் சசிகலா.
சசிகலாவின் காய் நகர்த்தல்கள் எல்லாமே இப்போது அதிமுகவை முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறதாம். அந்த எண்ணத்தில்தான் தற்போது சில நிபந்தனைகளை விதித்திருக்கிறாராம்.
கூட்டணி முடிவு
முதல்வர் வேட்பாளராக தற்போது எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயற்குழு,பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை செயற்குழு பொதுக்குழுதான் கூடி முடிவு செய்யும் என்றும், கூட்டணியையும் அவ்வாறே முடிவு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம் சசிகலா. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல் செக் வைத்துள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை
அதிமுகவில் இப்போது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை உள்ளது. அந்த பதவிகளை நீக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. இதன் மூலம் ஓ. பன்னீர் செல்வத்திற்கு செக் வைத்திருக்கிறார்.
சசிகலாவின் முக்கிய திட்டம்
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாராம் சசிகலா. இதன்மூலம் மீண்டும் பொதுச்செயலாளராக போட்டியிடலாம் என்பது சசிகலாவின் திட்டமாக உள்ளது.
நம்பி வந்தவர்களுக்கு பதவி
அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் குழுவை கலைக்க வேண்டும் என்பது சசிகலாவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு மீண்டும் பழைய பதவிகளை கொடுக்க வேண்டும் என்பதும் மிக முக்கிய நிபந்தனையாகும்.
சின்னம் வழக்குகள் வாபஸ்
அதிமுக, அமமுக ஆகிய இரு தரப்பிலும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பதும் சசிகலாவின் நிபந்தனையாக உள்ளது. அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு வந்தவர்களுக்கும் பதவி தர வேண்டும். எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிட்டார்களோ, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்றும் கட்சி பதவிகளையும் தரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம்.
சசிகலா நிபந்தனை செல்லுபடியாகுமா?
சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவே மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். விடுதலையாகும் முன்பே பல நிபந்தனைகளை விதிக்கும் சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது. சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் ஜெயலலிதா சமாதியில் இருந்து தனது அரசியல் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பார் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
அனல் பறக்கும்
சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு தமிழக அரசியலில் பல தரமான சம்பவங்கள் அரங்கேற காத்திருக்கிறது. அத்தனை வேடிக்கைகளையும் திருவாளர் பொதுஜனமும் வாக்காளர்களும் காண காத்திருக்கின்றனர். எது எப்படியோ வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைய விநோகங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தும் என்பது நிச்சயம்.