அதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் ஈபிஸ்... ராஜ்யசபா சீட்டை முன்வைத்து ஜெயக்குமார் விக்கெட் அவுட்!
சென்னை: அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்கள் ஓபிஎஸ் அணிக்கு போய்விடக் கூடாது என்பதில் ஈபிஎஸ் தரப்பு படுதீவிரமாக உள்ளது. இதன் முதல் கட்டமாக மாஜி அமைச்சர் ஜெயக்குமாரை சமாதானப்படுத்தியுள்ளதாம் ஈபிஎஸ் அணி.
25 ஆண்டுகாலம் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் ஊடக முகமாக வலம் வந்தார். சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஜெயக்குமாரின் தோல்வியை அதிமுகவில் ஒரு அணியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் மிக மன வருத்தத்தில் இருந்தார் ஜெயக்குமார். அத்துடன் தமது தேர்தல் தோல்வி தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே விசாரிக்கவே இல்லை என வருத்தத்தில் இருந்தார்.
தேர்தலில் உள்ளடி வேலை- கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால்... அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் கலகக் குரல்
அதிருப்தியில் ஜெயக்குமார்
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கூட விரக்தியில்தான் இருந்தார் ஜெயக்குமார். வழக்கமான கலகலப்பு எதுவும் இல்லாமல் பட்டும்படாமலேயே செய்தியாளர்களிடமும் பேசினார் ஜெயக்குமார். தமது தேர்தல் தோல்விக்கு காரண்மே உள்ளடிவேலைதான்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்பினார் ஜெயக்குமார்.
ஆட்சேர்க்கும் ஓபிஎஸ் அணி
ஆனால் அதிமுகவில் அதிகார மோதல் உச்சத்தில் இருப்பதால் ஜெயக்குமாரின் குமுறல் எடுபடாமலேயே இருந்து வந்தது. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பு தமக்கான ஆதரவாளர்களை திரட்டும் முயற்சியில் இறங்கியது. குறிப்பாக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்களை அணிதிரட்டுகிற வேலைகளில் ஓபிஎஸ் டீம் இறங்கியது.
ஜெயக்குமாருடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சு
இதை தெரிந்து கொண்ட ஈபிஎஸ் அணி உடனடியாக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டது. அவரை தொடர்பு கொண்டு பேசிய ஈபிஎஸ் தரப்பு தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்தும் விரிவாக கேட்டுக் கொண்டதாம். அத்துடன் இன்னொரு தகவலையும் சொல்லி ஜெயக்குமாரை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டதாம்.
ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா சீட்?
அதாவது இந்த 5 ஆண்டுகாலத்தில் ராஜ்யசபா எம்பி வாய்ப்புகள் வரும். அதனால் எதுவும் பேசாமல் வழக்கம் போல பணிகளை பாருங்கள்.. உங்களுக்கு வாய்ப்பு தானாகவே தேடி வரும் என உறுதி அளித்திருக்கின்றனராம். இந்த தகவல்தான் இப்போது ஜெயக்குமார் வட்டாரங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.