Exclusive: சி.வி.சண்முகம் இப்படித்தான் ‘சீட்’ வாங்கினார்! இனி தான் கச்சேரியே! போட்டுடைத்த புகழேந்தி!
சென்னை : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதால் இனிமேல் அதிமுகவில் நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறியுள்ளார்.
ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலுக்காக பலத்த எதிர்பார்ப்புகள் குழப்பங்கள் , போட்டிகளுக்குப் பிறகு அதிமுக சார்பில் இரு வேட்பாளர்கள் அறிவிக்க்ப்பட்டுள்ளனர்.
2 பிஞ்சு குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள்.. மொத்தம் 5 பேர் தற்கொலை! அதிர்ந்த ராஜஸ்தான்
அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுகிறது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து சிவி சண்முகம் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து தர்மரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கட்சியில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கர்நாடகா புகழேந்தி
இந்நிலையில் அதிமுகவில் சீட் வழங்குவதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதால் இனிமேல் அதிமுகவில் நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறியுள்ளார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில்," ஒன்றிய செயலாளராக இருந்த தர்மருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கூறினார்.
சி.வி.சண்முகத்திற்கு வாய்ப்பு
மேலும், ஆனால் அதே நேரத்தில் கட்சிக்காக உழைத்த பலருக்கு வாய்ப்பு தராமல் சிவி.சண்முகத்துக்கு வாய்ப்பு தரப்பட்டது ஏன்?. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவருக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது. மேலும் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தோற்பதற்கு பாமக, பாஜக தான் காரணம் என கூறிய சிவி சண்முகம், தற்போது அவர்களது வாக்குகளைக் பயன்படுத்தித்தான் மாநிலங்களவை செல்லப்போகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
ஓபிஎஸ் வெற்றி
உண்மையைச் சொல்லப்போனால் மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பில் ஓபிஎஸ் ஜெயித்துவிட்டார் ஆனால் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்துவிட்டார். அவரையே நம்பி இருந்த ஜெயக்குமார், செம்மலை, வளர்மதி உள்ளிட்ட பலர் அவரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். சமுதாய பலத்தை காட்டி தான் தான் அவர்களுக்கு பிரதிநிதி என்ற ரீதியில் சிவி சண்முகம் வேட்பாளர் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அடிமட்ட தொண்டர்கள் கூட பதவி கிடைக்க வேண்டும் என விரும்பினார் பல நேரங்களில் அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.
எடப்பாடிக்கு நெருக்கடி
ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். வேட்பாளர் அறிவிப்பில் பல மூத்த நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். கண்டிப்பாக இந்த விவகாரம் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும் வரும் நாட்களில் இது பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளது. சட்டமன்ற பதவிக்கு ஆசைப்பட்டு கேபி.முனுசாமி , வைத்தியலிங்கம் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதனை ஓராண்டுக்கு முன்பே செய்திருந்தால், அதிமுகவுக்கு கூடுதலாக இரண்டு பதிவுகள் கிடைத்திருக்கும் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை.
கட்சிக்குள் தகராறு
சிவி சண்முகத்தால் நாடாளுமன்றத்தில் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஆனால் திமுகவில் வழக்கறிஞர், பேச்சாளர் என தேர்தெடுத்து அனுப்பியுள்ளனர். சிவி சண்முகத்தை மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதில் அதிமுக நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சிக்குள் தகராறு உள்ளது. இந்த பிரச்சினை முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி கடந்துவந்த பாதையில் இது ஒரு தோல்வி என்றார். ஜெயக்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது குறித்து பேசிய புகழேந்தி," ஜெயக்குமாருக்கு வாய்ப்பு கொடுக்க கடைசி வரை ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை, இதனால் தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. " என்றார்.