அதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்
சென்னை: அதிமுக செயற்குழுவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய முடியாமல் போனதால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருதரப்புமே கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என நிரூபிக்க தயார் என இருதரப்பும் கோதாவில் இறங்கிவிட்டன.
சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நேற்று 5 மணிநேரம் நடைபெற்றது. இதில் தம்மையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
அந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி!
ஓபிஎஸ் ஆவேசம்
ஏனெனில், ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவன் நான்; அதிமுக அணிகள் இணைப்பின் போது இந்த ஆட்சிக்கு மட்டுமே நான் துணை முதல்வர்; ஆகையால் அடுத்த தேர்தலின் போது நானே முதல்வர் வேட்பாளர். என்னுடைய நல்லாட்சியை பிரதமர் மோடி பாராட்டினார் என ஓபிஎஸ் தமது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.
ஈபிஎஸ் பதிலடி
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, நாம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான். இதுவரை நல்லாட்சிதானே கொடுத்திருக்கிறேன். அதிமுக அரசு மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அப்புறம் ஏன் என்னுடைய தலைமையில் தேர்தலை சந்திக்கக் கூடாது? என்னையும்தான் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார் என வாதிட்டார். இருதரப்பு ஆதரவாளர்களும் காரசாரமாக விவாதித்தனர்.
அக்.7ல் முதல்வர் வேட்பாளர்?
இதனால் 5 மணிநேரத்துக்கும் மேலாக அதிமுக செயற்குழுக் கூட்டம் நீடித்தது. இந்த பிரச்சனை இன்றுடன் ஓயாது என முடிவு செய்த மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி போன்றோர், நீங்கள் இருவரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுங்கள். அக்டோபர் 7-ந் தேதி வரை அவகாசம் எடுத்து கொள்ளுங்கள் என கூறி செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என்றார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு கொந்தளிப்பு
இதன்பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வீடுகளுக்கு திரும்பி தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைகளில், ஈபிஎஸ் மீது தமது ஆதரவாளர்களிடையே கடுமையாக விமர்சனங்களை ஓபிஎஸ் வைத்தார். அதேநேரத்தில், அண்ணன் பேசினது எந்தவகையிலுமே சரியில்லை என ஈபிஎஸ்-ம் தமது ஆதரவாளர்களிடம் குமுறி இருக்கிறார். இருதரப்புமே, பேசாம பொதுக்குழுவை கூட்டுவோம். அங்கு வாக்கெடுப்பு நடத்துவோம். யாருக்கு அதிக ஆதரவோ அவரே முதல்வர் வேட்பாளர் என முடிவு செய்வோம் என தீர்மானித்திருக்கின்றனர்.
பொதுக்குழு கூடுகிறது
இதனால் அடுத்து பொதுக்குழுவை கூட்டுவதற்கும் பொதுக்குழுவில் தங்களுக்கான ஆதரவை தக்க வைக்கவும் இருதரப்பும் படுஜோராக களத்தில் இறங்கிவிட்டன. இதனிடையே டெல்லியின் ஆலோசனைப்படியே, ஓபிஎஸ் யாருமே எதிர்பாராத வகையில் செயற்குழுவில் படுசீற்றமாக பேசினார்; அப்படியானால் டெல்லி ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கப் போகிறதா? என்கிற தகவலும் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.