தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்.. ஓபிஎஸ் கோஷ்டியின் பாய்ச்சல்..எதுவும் நடக்காதோ பீதியில் ஈபிஎஸ் அணி!
சென்னை: அதிமுகவில் தமது ஒருங்கிணைப்பாளர் பதவியை தக்க வைக்க தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் என அடுத்தடுத்து ஓபிஎஸ் கோஷ்டி பாய்ந்திருப்பதால் தாங்கள் நினைத்தது எதுவுமே நடக்காதோ என்ற அச்சத்திலும் பீதியிலும் ஈபிஎஸ் அணி இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஈபிஎஸ் அணியைப் பொறுத்தவரை ஜூலை 11-ல் பொதுக்குழு நடத்துவது; அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளராக மகுடம் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக அத்தனை வியூகங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி.
அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு! ஈபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
ஓபிஎஸ் அணி வியூகம்
ஆனால் ஓபிஎஸ் அணியோ, ஜூலை 11 பொதுக்குழுவை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. அத்துடன் நிற்காமல் தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் அணி மனு கொடுத்துள்ளது.
ஈபிஎஸ் கோஷ்டி அதிர்ச்சி
ஓபிஎஸ் அணி அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்க்காத ஈபிஎஸ் கோஷ்டி ரொம்பவே அதிர்ச்சி அடைந்துள்ளதாம். தாங்கள் திட்டமிட்டபடி ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெறாமல் போனால் தங்களுக்கு பெரும் பின்னடைவு என்றும் பொதுச்செயலாளர் பதவிக்காக இவ்வளவு மெனக்கெட்டது அத்தனையுமே வீணாகிவிடுமோ எனவும் ஈபிஎஸ் கோஷ்டி கடும் உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறதாம். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே ஈபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
அதாவது ஜூன் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது; அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவரக்கூடாது என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது; பொதுக்குழு, செயற்குழு முடிவுகளை நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தாது எனவும் அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
முடங்குமோ அத்தனையும்
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பின் அடுத்தடுத்த சட்ட போராட்டங்கள் அதிமுக தொண்டர்களை பெரும் கவலையடைய வைத்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் அதிமுக கட்சி என்ற பெயர், அதிமுக தலைமை அலுவலகம், இரட்டை இலை சின்னம் அத்தனையும் முடங்கும் நிலைதான் உருவாகும்; இது அதிமுகவுக்கு மிகப் பெரும் பலவீனமாகிவிடும் என்பது தொண்டர்களின் கவலை.