சசிகலாவுக்கு திடீர் ஆதரவு- ஓ.பி.எஸ். மீது ஒழுங்கு நடவடிக்கை சாத்தியமா? எடப்பாடி கோஷ்டி பரபர ஆலோசனை!
சென்னை: சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு அக்கட்சியில் மீண்டும் ஒரு புதிய பிளவுக்கு அச்சாரம்போட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? அது சாத்தியம்தானா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் இரட்டை தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்படுவது நீண்டகாலத்துக்கு சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. தற்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரலை ஓ.பி.எஸ். மறைமுகமான முன்வைக்க அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.
2ம் அலையும் இப்படித்தான் தொடங்கியது.. மிரட்டும் AY.4.2 வகை கொரோனா.. 3ம் அலைக்கான டிரெய்லரா?
மோதல் ஓயாது?
ஓபிஎஸ்-ன் தம்பி, டிடிவி தினகரன் வீட்டு திருமண வரவேற்பில் பங்கேற்றும் இருக்கிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல் ஓய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் வலது கரமாக இருந்த கேபி முனுசாமி இப்போது இபிஎஸ் அணிக்கு தாவிவிட்டார் என்கிற பேச்சு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஓபிஎஸ்-க்கு வார்னிங்
ஓபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு கேபி முனுசாமியைத்தான் இபிஎஸ் பயன்படுத்தியும் வருகிறார் என்று கூறுகின்றன அக்கட்சி வட்டாரங்கள். தற்போது சசிகலா விவகாரத்திலும் ஓபிஎஸ்ஸிடம் பேசியது கேபி முனுசாமிதான் என கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸிடம் பேசிய கேபி முனுசாமி, ஒரு முடிவு எடுத்துவிட்டோம்.. அதற்கு பின்னரும் அதையே ஏன் பேசிகிட்டே இருக்கீங்க... எடப்பாடி தரப்பு கோபமாக இருக்கிறது. உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டார்கள் போல என கொஞ்சம் காட்டமான குரலில் பேசினார் எனவும் கூறப்படுகிறது.
பிளவுபடும் அதிமுக
ஓபிஎஸ் தரப்போ, தங்கள் பக்கம் உள்ள நியாயங்களைச் சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் தென்மாவட்ட அதிமுக ஓபிஎஸ் பக்கமும் வடக்கு மற்றும் கொங்கு மாவட்ட அதிமுக இபிஎஸ் பக்கமுமாக பிரிந்து நிற்கின்றன என கவலைப்படுகின்றனர் சீனியர் தலைவர்கள். ஓபிஎஸ்-க்கு கடிவாளம் போடுவதுதான் சரியாக இருக்கும் என இபிஎஸ் தரப்பில் சில சீனியர் தலைவர்கள் குமுறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் மீது என்ன நடவடிக்கை?
அப்படியானால் ஓபிஎஸ்-க்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது? அப்படி எடுப்பது சட்டப்படி என்ன மாதிரியான சிக்கலைத் தரும்? இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தொண்டர்கள் ஆதரவு எப்படி இருக்கும்? என பல கோணங்களில் தீவிரமான ஆலோசனைகளில் இபிஎஸ் தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதேநேரத்தில் ஓபிஎஸ்-க்கு பாஜகவின் ஆதரவு இருக்கிறது; அதனால் எடப்பாடி தரப்பு அவ்வளவு சீக்கிரமாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுத்துவிடாது; ஓபிஎஸ் தரப்புக்கு கலக்கத்தை தருவதற்கு வேண்டுமானால் எடப்பாடி தரப்பு இப்படியான தகவல்களை கசியவிடலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிமுக தொண்டர்கள் எந்த பக்கம் சாய்வது என்கிற குழப்பத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்கிற ஆதங்கத்தையும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.