பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு 'தானசெட்டில்மென்ட்' ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி கே.சி.வீரமணி
சென்னை: தமது பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு தானசெட்டில்மென்ட் பத்திர முறையை கேடயமாக பயன்படுத்தினார் அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி என திடுக்கிட வைக்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.
Recommended Video
அதிமுக ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சைகளுக்கும் நில மோசடிப் புகார்களுக்கும் உள்ளானவர் கே.சி.வீரமணி. இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்திடம் குட்டும் வாங்கியவர்தான் கே.சி.வீரமணி.
தற்போது வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.சி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.. பலாத்காரம் செய்துடுவாங்களோனு அச்சம்.. அலமாறியில் ஒளிந்த நடிகை!
தானசெட்டில்மென்ட் மூலம் மோசடி
கே.சி.வீரமணி, பத்திரவுப் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர். அதனால் பத்திரப் பதிவு துறையில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறதோ அத்தனை ஓட்டைகளையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்கின்றனர் அவர் மீது குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கத்தினர். உதாரணமாக, மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் கே.சி.வீரமணி. அதனை மறுநாளே தமக்கு தானசெட்டில்மென்ட் கொடுத்ததாக மாற்றியும் இருக்கிறார். அம்மா பெயரில் முதல் நாள் ஒரு நிலம் வாங்குகிறார். மறுநாள் தான செட்டில்மென்ட் முறையில் தமக்கு மாற்றி இருக்கிறார்.
வழிகாட்டி மதிப்பில் மோசடி
மேலும் ஹில்ஸ் ஏலகிரி என்ற பெயரில் ஏகப்பட்ட நிலம் வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ரத்த சொந்தங்களின் பெயரால் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் தமக்கு தானசெட்டில்மென்ட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறாராம் வீரமணி. இப்படி தானசெட்டில்மென்ட் முறையை சாதகமாக்கி மோசடி செய்தல், வழிகாட்டி மதிப்பைவிட குறைவான தொகைக்கு நிலத்தை பதிவு செய்தல் என தமது மொசடிகளை அரங்கேற்றி இருக்கிறாராம் கே.சி.வீரமணி.
10 ஆண்டுகளில் ரூ76.65 கோடி சொத்து
2011-ம் ஆண்டு கே.சி.வீரமணி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ7.48 கோடி; இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ76.65 கோடியாக அதிவிஸ்வரூபமெடுத்திருக்கிறது. இவை எல்லாம் வெளியே தெரிந்த சொத்துகள்.. இன்னமும் எத்தனை எத்தனை பினாமிகள் பெயரில் எத்தனை நூறு கோடி ரூபாய் சொத்துகளை வாங்கு குவித்துள்ளாரோ கே.சி.வீரமணி என்கின்றன லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்.
சொத்து விவரங்கள்
மேலும் ஹோம் டிசைனர் அண்ட் ஃபேப்ரிகேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.15 கோடிக்கு அசையா சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் ஓசூர் சிப்காட்டில் ஆகப் பெரும் மோசடி செய்து 99 ஆண்டு குத்தகைக்கு அரசு நிலத்தை வாங்கியிருக்கிறது. வி.பி.ஆர்.ஹில் ப்ராப்பர்ட்டீஸ் பெயரில் ரூ.7 கோடி; ஹோட்டல் ஹில்ஸ் திருப்பத்தூர் நிறுவனம் பெயரில் ரூ.6 கோடி; அகல்யா, பத்மாசினி பெயரில் ரூ.3.2 கோடி வாங்கப்பட்டுள்ளன என்கிற பட்டியலும் நீள்கிறது. இன்னும் தோண்ட தோண்ட எத்தனை பூதங்கள் வெளிவரப் போகிறதோ?