நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்
சென்னை: அதிமுக செயற்குழுவில் நடந்த விவாதங்களில் பிரதமர் மோடி நல்லாட்சி தருவதாக யாரை பாராட்டினார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றது.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் 5 மணிநேரம் நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பும் மனதில் தேக்கி வைத்த அத்தனை ஆதங்கங்கள், விருப்புகளையும் ஒரேபோடாக இன்று கொட்டி தீர்த்திருக்கின்றனர்.
இந்த விவாதங்களின் போது, அதிமுகவில் மீண்டும் இணையும் போது டெல்லி சொன்னதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன். அடுத்த தேர்தலுக்கும் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.
மேலும், நான் நல்லாட்சியை நடத்தியதாக பிரதமர் மோடி என்னைத்தான் பாராட்டினார். அதனால்தான் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார் ஓபிஎஸ். இதற்கு எடப்பாடி பழனிசாமியே நேரடியாக பதில் தந்திருக்கிறார்.
உங்களை முதல்வர் வேட்பாளர்னு ஏன் அறிவிக்கனும்? இந்த ஆட்சி மோசமா?ஈபிஎஸ் டீமின் கேள்விகளால் ஓபிஎஸ் ஷாக்
பிரதமர் மோடி என்னையும்தானே பாராட்டி இருக்கிறார்.. .3 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக மோடி பாராட்டினாரே.. இதுக்கு என்ன பதில் இருக்கிறது? என எகிறியிருக்கிறார். இருதரப்பும் பிரதமர் மோடியை முன்வைத்து மல்லுக்கட்டியதை சீனியர்கள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தனராம்.