நானே அதிமுக பொதுச்செயலாளர்... கோர்ட் கதவுகளை மீண்டும் தட்டிய சசிகலா.. அதிகாரப்பூர்வ் அதகளம் ஆரம்பம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரிக்க 'சிறை மீண்ட' சசிகலா நீதிமன்றத்தின் கதவுகளை மீண்டும் தட்டியிருப்பது அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2017-ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது.
இதனால் சிறைக்கு போவதற்கு முன்னதாக தினகரனை துணைப் பொதுச்செயலாளராக, சசிகலா நியமித்தார். ஆனால் 2017 செப்டம்பரில் கூடிய அதிமுக பொதுக்குழுவோ சசிகலா, தினகரன் நியமனங்களை ரத்து செய்தது. அத்துடன் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டன.
சசிகலா முறையீடு
தங்களை பதவிகளில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலாவும் தினகரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 3 ஆண்டுகாலம் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சசிகலா தற்போது மீண்டும் நீதிமன்ற படிகள் ஏறி இருக்கிறார். 2017-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என தாம் தொடர்ந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்பது சசிகலாவின் முறையீட்டு மனு. இந்த முறையீட்டு மனுவை சிட்டி சிவில் நீதிமன்றம் மார்ச் 15-ந் தேதி விசாரிக்க உள்ளது.
அதிமுகவினருக்கு அதிர்ச்சி
சசிகலா அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை; சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலாளர் என சொல்லவே இல்லை என அதிமுக தலைவர்கள் இடைவிடாமல் பேட்டி அளித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நானே பொதுச்செயலாளர் என சசிகலா நீதிமன்றத்துக்கு மீண்டும் போயுள்ளார்.
அதிமுகவில் குழப்பம்
இது அதிமுக தலைவர்களை மட்டும் அல்ல நிர்வாகிகளையும் கடுமையாக அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிற நிலையில் சசிகலா ஆடுகளத்தில் இறங்கியிருப்பது பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப்போது தாமே பொதுச்செயலாளர் என கூறும் சசிகலா அடுத்தாக வேட்பு மனுக்களில் கையெழுத்திடும் அதிகாரமும் தமக்கே என வாதிடுவதற்கும் வழக்கு தொடருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
அடுத்து என்னவாகும்?
அத்துடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது கடந்த 3 ஆண்டுகால கட்சி நியமனங்கள், நீக்கங்கள் என்னவாகும்? என்பதும் தெரியவில்லை. சசிகலாவின் தற்போதைய தடாலடியான அதகள ஆட்டம் அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வேட்பாளர்களாக விரும்புகிறவர்கள், 3 ஆண்டுகளில் பதவி பெற்றவர்கள் அடுத்து என்ன ஆகுமோ என்கிற பேரச்சத்தில் உறைந்து கிடக்கின்றனராம்.