சசிகலா பேச்சில் புல்லரித்துப்போன மாஜிக்கள்... 15 பேரின் பியூஸை பிடுங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்
சசிகலா போனில் பேசியதால் புல்லரித்து போய் இருந்த மாஜி அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதால் பீஸ் பிடுங்கப்பட்ட பல்பு போல உள்ளனர்.
சென்னை: சசிகலா உடன் எந்த ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதையும் மீறி சசிகலா உடன் போனில் பேசி அதை ஆடியோ ரிலீஸ் செய்ய வைத்த மாஜி அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் தற்போது பீஸ் போன பல்பு போல கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
நான் சசிகலா பேசுறேன்... ஆனந்தன் நல்லா இருக்கீங்களா? என்று தொலைபேசி வழியாக சசிகலா பேசியதைக் கேட்டு நம்ப முடியாமல் புல்லரித்துப்போனார் மாஜி அமைச்சர் ஆனந்தன். நிஜமாகவே சசிகலாதானா? அல்லது வேறு யாராவது குரல் மாற்றி பேசுகிறார்களா என்று கூட யோசித்தார்.
தொடர்ந்து பேசிய சசிகலா குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தார். , "எதுக்கும் கவலைப்படாதீங்க ஆனந்தன். சீக்கிரம் ஒரு நல்லது நடக்கும். நிச்சயமாக வந்துடுவேன். நான் எல்லோரிடமும் பேச ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவோ லெட்டர் வருது. மனசு குமுறலாக எழுதுறாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா ஆகிடுச்சு எனக்கு என்று சொன்னார்.
சசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்
சசிகலா ஆடியோ
இந்தக் கட்சி, நம் கண்ணெதிரே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமாக இருக்கு ஆனந்தன். அந்த மனக் கஷ்டம் தாங்க முடியலை. நீங்களெல்லாம் பழைய ஆட்கள். நீங்களெல்லாம் இப்படி இருப்பது எனக்கே மனசு கஷ்டமாக இருக்கு. தொண்டர்களுக்காக நிச்சயம் வருவேன் என்று சொன்ன சசிகலா, அம்மா எப்படிக் கட்சியை வைத்திருந்தாங்களோ... அதைப்போலவே கொண்டு வந்துடலாம். கொரோனா முடியட்டும், உங்களை விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று பேசி புல்லரிக்க வைத்தார்.
மாஜி அமைச்சர்
உளுந்தூர்பேட்டையை அடுத்த நத்தாமூரைச் சேர்ந்த ஆனந்தன். எம்ஜிஆர் காலத்தில் 1984ஆம் ஆண்டு, உளுந்தூர்பேட்டை சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். 1991-லும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
ஆனந்தன் நீக்கம்
2009ஆம் ஆண்டு விழுப்புரம் லோக்சபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில்தான் சசிகலா உடன் போனில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு கட்சியைக் கட்டுப்படுத்த சசிகலாவினால் மட்டுமே முடியும் என்றும் பேட்டி கொடுத்தவர். இப்போது ஆனந்தனை அதிமுகவை விட்டு நீக்கியுள்ளனர்.
ஓபிஎஸ் இபிஎஸ் நடவடிக்கை
ஆனந்தனைப் போல பலரிடம் பேசிய சசிகலா தினம் தினம் ஆடியோக்களை ரிலீஸ் செய்தார். இதன் மூலம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார். தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தையும் ஏற்படுத்தலாம் என்று நினைத்த சசிகலா இப்போது ஆடிப்போகும் வகையில் ஒபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சசிகலா நாடகம்
பதவி, பட்டம், அதிகாரம் ஆகியவற்றுக்கு நான் ஆசைப்பட்டவளில்லை. அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் என்று சட்டசபைத் தேர்தலுக்கு முன் அடுக்குமொழி வசனத்தில் அறிக்கைவிட்ட சசிகலா இப்போது ஆடியோவை ரிலீஸ் செய்து நாடகமாடி கட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார். அதற்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லி சசிகலா உடன் பேசிய 15 பேரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
15 பேர் யார் யார்
கள்ளக்குறிச்சி எம்.ஆனந்தன், ஈரோடு சின்னச்சாமி, வேலூர் வாசு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோமாத்தூர் சுப்ரமணியம், வின்சென்ட் ராஜா, பருத்தியூர் நடராஜன், திருச்சி அருள்ஜோதி, மதுரை சுஜாதா ஹர்சினி, திருவண்ணாமலை அம்மா சிவா, கன்னியாகுமரி பில்மூர் ராபர்ட், தென்சென்னை தெற்கு ஸ்ரீதேவி பாண்டியன், ராஜேஷ்சிங், ஒட்டக்காரன் ராஜூ, சதீஷ், மதுரை வி. ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளதாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.