சட்டசபைத் தேர்தலுக்கு கன ஜோராக தயாராகும் அதிமுக - டிச.27ல் சென்னையில் பொதுக்கூட்டம்
சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக படு வேகமாக தயாராகி வருகிறது. வரும் ஜனவரி 9ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
234 இடங்களை கொண்டுள்ள தமிழக சட்டசபையின் ஆயுள்காலம், அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
கொரோனா காலமாக இருந்தாலும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் படு பரபரப்பாக தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.
2021 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. திமுக பிரச்சார வியூகத்தை ஆரம்பித்து விட்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படாமலேயே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன அரசியல் கட்சிகள்.
கொங்கு மண்டலம்.. திமுக லீடிங்.. ரஜினியால் அடி வாங்கப் போகிறது அதிமுக.. மூத்த பத்திரிகையாளர் இதயா
பொதுக்குழு எப்போது
அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக முக்கிய ஆலோசனை நடத்தியது பிரச்சார வியூகம் பற்றி பேசப்பட்டது. மிசன் 200 என்ற வெற்றி இலக்கை முன் வைத்து பிரச்சாரம் செய்யப்போகிறது திமுக. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றிரவு 9 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சி.வி.சண்முகம் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டசபைத் தேர்தல் வியூகம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது, அதற்கான தேதியை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
ஜன.9ல் செயற்குழு பொதுக்குழு
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பெரும்பாலும் டிசம்பர் இறுதியிலேயே நடைபெறும். இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் காலமாக இருப்பதால் ஜனவரி 9ஆம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு வெளியாகும்
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மிசன் 232 என்ற இலக்கை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டார் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா. ஜெயலலிதா இல்லாத சட்டசபைத் தேர்தலை முதன் முதலாக அதிமுக சந்திக்கப் போகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகிறது அதிமுக தலைமை. இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் மிகமுக்கிய அறிவிப்பினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக
பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் கூடி ஆலோசனை நடைபெற்ற பின்னர்தான் சட்டசபைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தை அதிமுக தொடங்குவது வழக்கம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் தனியாக சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். டிசம்பர் 27ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர்.