4 விஷயம்.. 2400 பேருக்கு அவசர அழைப்பு.. 2 வருடத்திற்கு பின் கூடும் அதிமுக பொதுக்குழு.. என்ன காரணம்?
அதிமுக கட்சியில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான 4 விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: அதிமுக கட்சியில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான 4 விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் சரியாக இரண்டு வருடங்களுக்கு பின் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கடைசியாக 2017ல் முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அதிமுகவின் 2 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு விஷயம்
அதிமுக கட்சியில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான 4 விஷயங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதில் அதிமுக எத்தனை மேயர் பதவிகளில் போட்டியிடும், எத்தனை இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கும் என்று ஆலோசிக்க இருக்கிறார்கள்.
வேறு என்ன
அதேபோல் இன்னொரு முக்கிய விஷயமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர். யார் தலைமையில் பிரச்சாரம் செய்வது. உள்ளாட்சி தேர்தலுக்காக என்ன வாக்குறுதி கொடுப்பது என்று தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை செய்ய இருக்கிறார்கள்.
சசிகலா எப்படி
அதேபோல் இன்று கட்சியில் இருந்து முக்கியமான உறுப்பினர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறீர்கள். சசிகலாவை இன்று கட்சியில் இருந்து நீக்க அதிக வாய்ப்புள்ளது. அவருக்கு ஆதரவாக இருக்கும் சிலரையும் கட்சியில் இருந்து நீக்க வாய்ப்பு இருக்கிறது.
முக்கியம்
அதேபோல் அமைச்சரவை மாற்றம் குறித்தும், விரிவாக்கம் குறித்தும் இந்த பொதுக்குழுவிலேயே முடிவு செய்ய இருக்கிறார்கள். கட்சி பொறுப்பில் இருக்கும் சிலருக்கு அமைச்சர் பதவியும், அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சிலருக்கு கட்சி பதவியும் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.