அதிமுக அபாரம்.. நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அமோக வெற்றி.. 2 தொகுதிகளையும் இழந்த திமுக கூட்டணி
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில், அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இரு தொகுதிகளையுமே திமுக கூட்டணி இழந்துள்ளது.
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாவது இடத்தை பிடித்தார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி மற்றும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சுமார் 8.30 மணிக்கு மேல் துவங்கியது.
விக்கிரவாண்டியில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன், திமுக வேட்பாளர்களை விட முன்னிலை பெற்று இருப்பது தெரியவந்தது. இதன்பிறகும், தொடர்ச்சியாக, அதிமுகதான் முன்னிலை பெற்றது. எந்த நேரத்திலும், திமுகவால் முன்னிலை பெறவே முடியவில்லை. நாங்குநேரியிலும் இதே நிலைதான் இருந்தது.
ஆரம்பம் முதல் அசத்தல்
காலை 10.30 மணி நிலவரப்படி, அதிமுக வேட்பாளர் 10355 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். மதியம் 1.15 மணி நிலவரப்படி, வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவடைந்தன. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளையும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகளையும் பெற்றிருந்தனர். எனவே, 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
வாக்கு வித்தியாசம் அதிகம்
இரு வேட்பாளர்களுக்குமான, வாக்கு வித்தியாசம் அதிகமாக இருப்பதை வைத்து பார்த்தால், அதிமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்றியுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோல 22 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 94,802 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,991 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ரூபி மனோகரனை விட நாராயணன் 33,447 வாக்குகள் அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மும்முனை போட்டி
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தவிர நாம் தமிழர் கட்சியும் களமிறங்கியது. அங்கு மும்முனைப் போட்டி நிலவியது. விக்கிரவாண்டியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 2913 வாக்குகளை பெற்று 3வது இடத்தை பிடித்தார். நாங்குநேரியில், பனங்காட்டுப்படையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளரான, ஹரி நாடார் 4242 வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.
அதிமுக உற்சாகம்
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட தேனி தவிர்த்த பிற அனைத்து தொகுதிகளிலும், திமுக கூட்டணி தான் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றுள்ளது, அந்த கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.