ஒருபக்கம் ரெய்டு.. மறுபக்கம் கந்தசாமியுடன் ஸ்டாலின் மீட்டிங்.. இது எங்காவது நடக்குமா.. அதிமுக மனு
சென்னை: அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த திமுக அரசு தங்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பல்வேறு வழக்குகளை ஜோடிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் புகார் அளித்துள்ளனர்.
இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் அவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அதிமுக கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசானது அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஊழலில் தமது எம்எல்ஏக்களை திளைக்கவிட்டு பாக்கெட்டை நிரப்பும் பணிகளில் ஈடுபட்டது. நல்லாட்சியையும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு அதிமுக மீது அரசியல் பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
சாத்தியமா?.. அதுவும் 8 மாசத்தில்?.. அனைவருக்கும்
இந்த அரசின் கரப்ஷன்- கலெக்ஷன்- வென்டேட்டா (ஊழல்- பணத்தை சுருட்டுதல்- காழ்ப்புணர்ச்சி) ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. தற்போது 100 நாட்களை முடித்துள்ள திமுக ஆட்சி ஊழல் செய்ததுதான் சாதனையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாலைகள், கட்டடங்கள், நீர் பாசன திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் நல பணிகளை நிறுத்திவிட்டது. செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப்பணிகளுக்கு அரசுதான் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் அந்த பணத்தை பெறவே ஒப்பந்ததாரர்களிடம் திமுக எம்எல்ஏக்கள் கணிசமான தொகையை வாங்கிக் கொள்கிறார்கள்.
வெளிப்படைத்தன்மை இல்லை
டெண்டர் விடுவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒப்பந்ததாரர்கள் ஆட்சியில் இருப்போருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறார்கள். நிலுவையில் உள்ள பணிகளுக்கும் புதிய பணிகளுக்கு திமுக அரசு கமிஷன் வாங்கி வருகிறது. எதிர்ப்பாளர்களின் குரல்வளையை நெரிக்கும் அளவுக்கு திமுக அரசு தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்த நிலையில் அதை மறைக்க அதிமுக மீது பொய்யான வழக்குகளை போட்டு வருகிறது.
அரசு இயந்திரம்
அதிமுகவுக்கு எதிராக செயல்பட அத்தனை அரசு இயந்திரத்தையும் குறிப்பாக காவல் துறையை ஏவுகிறது. அரசு திட்டங்களில் லஞ்சம் பெறுவதில் கவனம் செலுத்தி வரும் திமுக அரசு, தங்கள் அமைச்சர்கள் மீதான நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளிலிருந்து அவர்களை காப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே இது நன்கு தெரியும்.
வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு
எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரை முதல்வர் ஸ்டாலின் அழைத்து சந்திப்பது இதுவரை அரசியல் வரலாற்றில் நடக்காத கேள்விப்படாத விஷயமாகும். காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இது போல் மீட்டிங் நடத்துவது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தெள்ளத் தெளிவாகிறது.
கொடநாடு கொலை வழக்கு
கொடநாடு கொலை வழக்கை திமுக கையாளும் விதமே அதன் தோல்விக்கு சிறந்த உதாரணமாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை தொடர்பானதுதான் இந்த வழக்கு. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து அவர்கள் சிறையில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்த வழக்கில் அத்தனை விசாரணைகளும் நடந்து முடிந்த பிறகு குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. விசாரணையை முடிந்த நிலையில் தமிழக அரசோ மேற்கொண்டு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்த உச்சநீதிமன்றமே மறுத்துள்ளது. இதிலிருந்து எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தன் மீது குற்றங்களை சுமத்தவே மீண்டும் விசாரணையை நடத்த கேட்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரே இப்படி அரசாங்கத்தால் பொய் வழக்கு ஜோடிக்கப்படும் போது சாதாரண குடிமகனின் நிலை என்ன என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
திமுக அரசு
பேச்சுரிமையை நெரிப்பது போல் நமது அம்மா நாளிதழில் திமுக அரசு விதிமுறைகளை மீறி ரெய்டு நடத்தி அடுத்த நாள் நாளிதழே வராத அளவுக்கு ஊடகத்தின் குரல்வளையை நெரித்தனர். அதிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். அது போல் சமூகவலைதளவாசிகளின் குரல்களையும் நெரிக்கிறார்கள். பழைய பதிவுகளுக்கெல்லாம் தற்போது நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருகிறது.
திமுக செயல்படுவதற்கு உதாரணம்
அரசியலமைப்புக்கு எதிராக திமுக செயல்படுவதற்கு இது போல் நிறைய உதாரணங்கள் உள்ளன. அரசு பதவிகளும் வேலைகளும் திமுகவுக்கு நெருக்கமானவர்களுக்கே வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களை நீக்கவும் அமைச்சர்கள் முயற்சித்து வருகிறார்கள். கொரோனாவை கையாள்வதிலும் திமுக தோல்வி அடைந்துள்ளது. கொரோனா குறித்து உலகத்திற்கு சிறிய அளவில் தகவல்கள் தெரியும் போதே அப்போதிருந்த அதிமுக அரசு கொரோனா பரவலை திறமையாக கையாண்டது. பொதுமக்கள் யாரும் கஷ்டப்படாத அளவுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய எங்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
வெளிப்படைத்தன்மை இல்லை
கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதாக திமுக அரசு பொய்யான குற்றச்சாட்டை அளித்துள்ளது. அனைத்து நோயாளிகளுக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறது. கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள திமுக அரசு தயார் நிலையில் இல்லை. கொரோனா எண்ணிக்கையை குறைவாக காட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு முதற்கட்ட சோதனையை நடத்த வேண்டாம் என அரசு அதிகாரிகளுக்கு திமுக உத்தரவிட்டுள்ளது. கொரோனா குறித்து ஆளுநர் விசாரணை நடத்தினால் உண்மை நிலை தெரியும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.