25 நாட்களில் ஆட்சி கவிழும்.. துரைமுருகன் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்!
சென்னை: இன்னும் 25 நாட்களில் ஆட்சியை மாற்ற வேண்டியது எனது, பொறுப்பு என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சூலூர் சட்டசபை இடைத் தேர்தல் தொடர்பான பிரச்சார கூட்டத்தில் பேசிய துரைமுருகன், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. சூலூரில் வெற்றியை பெற்றுத் தாருங்கள். அடுத்த 25 நாட்களுக்குள், ஆட்சியை மாற்ற வேண்டியது எனது பொறுப்பு. இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சி மாற்றம் குறித்து துரைமுருகன் கூறிய கருத்து இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று தெரிவித்துள்ளார்.
பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்
ஜெயக்குமார் கூறியதாவது: துரைமுருகன் கருத்தை, நூற்றாண்டின் சிறந்த ஜோக் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி சொல்லி, சொல்லி இந்தப் பழம் புளிக்கும் என்பது போலாகிவிட்டது. நரி கதை தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது. இதெல்லாம் நடக்காது. இந்த ஜூன் மாதம், என்று கிடையாது, 2021ம் ஆண்டு, ஜூன் மாதம் வந்தாலும் சரி, அதிமுகதான் தமிழகத்தில், ஆட்சியமைக்கப் போகிறது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.