வண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சிஐஏ எதிர்ப்புப் போராட்டத்தில், தவறான தகவல் பரப்பப்பட்டு வன்முறை தூண்டி விடப்பட்டதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் நடுவில் கைகலப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து இரவோடு மாநிலம் முழுக்க இஸ்லாமிய அமைப்புகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்ட 120க்கும் மேற்பட்டவர்களை, உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதேநேரம் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வண்ணாரப்பேட்டையில் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்பினர் நான்காவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு இன்று கூடியது. காவல்துறையை தன்வசம் வைத்திருக்க, கூடியவரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார்.
சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் அரசு மேற்கொள்ளாது. இஸ்லாமியர்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும்.
வண்ணாரப்பேட்டையில், அனுமதி இல்லாமல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது ஒத்துழைக்க மறுத்து காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மீது, கற்கள், செருப்பு வீசப்பட்டது. இதுவரை 82 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். சில சக்திகளும், விஷமிகள் போராட்டத்தை தூண்டி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நோயால் இறந்தவரின் போட்டோவை காண்பித்து, போலீஸ் தடியடியால் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
முதல்வர் பதிலில் திருப்தி இல்லை என கூறி எதிர்க்கட்சிகள், சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன. முன்னதாக, சிஏஏ குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பேரவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.