சூலூரில் ஒரு சூப்பர் போட்டி.. பழனிச்சாமிக்கு எதிராக கந்தசாமி.. டஃப் கொடுக்க சுகுமார்.. பரபர தேர்தல்
சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக விபி கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சூலூர் தொகுதியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கிவிட்டது!
சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவை அடுத்துதான் அந்த தொகுதியில் தேர்தல் நடக்க போகிறது. சூலூர் தொகுதியைப் பொறுத்தவரை கொங்கு வேளாளர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி.
அதற்கு அடுத்த நிலையில் அருந்ததியர் சமுதாய மக்கள் உள்ளனர். தேவர், நாயுடு சமுதாய வாக்குகளும் இங்கு கணிசமாக உள்ளது. அதனால் இதற்கேற்றார்போலதான் வேட்பாளர் தேர்வும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கூடி வந்தது.
எட்டு வழிச்சாலையை வைத்து.. மீண்டும் வெடித்தது அரசியல் வார்த்தைப் போர்..!
பொங்கலூர் பழனிசாமி
இதில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும், அமமுக சார்பில் பொள்ளாச்சி எக்ஸ் எம்பி சுகுமாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளராக வி.பி. கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்பி சுகுமார்
இதில் சாதீய ரீதியான வாக்குகளை அள்ளவே தினகரன் முன்னாள் எம்பி சுகுமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். இவர்மீது தொகுதியில் நிறைய அதிருப்தி உள்ளது. எம்பியாக வெற்றி பெற்ற பிறகு இவர் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லையாம். அதனால் எங்கள் எம்பியை காணவில்லை என்ற ரேஞ்சுக்கு நோட்டீஸ் அடித்து ஒட்டப்பட்டு ஃபேமஸ் ஆனவர்.
வீடியோ
இதை தவிர, நாடாளுமன்றத்தில் தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக கேள்விகளை கேட்க சுகுமார் லஞ்சம் வாங்கிய வீடியோவும் வெளியானது. இந்த விவகாரத்தில் சிக்கி ரொம்பவே நொந்து போனவர்தான் சுகுமார். இருந்தாலும், சுகுமார் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார் தினகரன்.
விபி கந்தசாமி
மற்றொருபுறம் அதிமுக சார்பில், மறைந்த கனகராஜ் மனைவி ரத்தினம் இங்கு சீட் வாங்க நிறையவே போராடினார். அவரை தவிர, முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, ப.வெ.தாமோதரன் ஆகியோர்கூட சீட் வாங்க முயற்சித்ததாக கூறப்பட்டது. எனினும் அதிமுக வேட்பாளராக விபி கந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார். முக்கிய காரணம் சாதீய ஓட்டுக்கள்தான். கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பதவியில் உள்ளார் கந்தசாமி.
கட்சியின் சீனியர்
திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி பற்றி சொல்லவே தேவையில்லை. கோவை மாவட்டத்தில் கட்சியின் சீனியர் இவர். முன்னாள் அமைச்சரும்கூட. லோக்சபா தேர்தலிலேயே பொங்கலூர் பழனிச்சாமி தனது மகனுக்கு சீட் வாங்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். உண்மையில் பொங்கலூர் பழனிச்சாமி சற்று ஒதுங்கியே இருந்தார்.
அமைச்சர் ஆக வாய்ப்பு
ஆனால் ஸ்டாலின் அதை விரும்பவில்லையாம். பொங்கலூர் பழனிச்சாமி போன்ற சீனியர்கள் ஒதுங்கியிருக்கக் கூடாது என்று நினைத்த அவர் சூலூர் சீட்டைக் கொடுத்து இழுத்து வந்துள்ளார். வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பரவலாக திமுகவினர் கூறி வருகின்றனர். அப்படி நடந்தால் பழனிச்சாமி அமைச்சராவார் என்றும் பேசப்படுகிறது.
திமுக நேரடி மோதல்
கடந்த, 2011ல் தான் சூலூர் தொகுதி உருவானது. 2011, 2016-ன்போது நடைபெற்ற 2 தேர்தல்களில் திமுக போட்டியிடவில்லை, மாறாக கூட்டணி கட்சியைதான் போட்டியிட வைத்தது. இப்போது, நேரடியாகவே சூலூர் தொகுதியில் களம் இறங்குகிறது திமுக. அதற்காக திமுக தொண்டர்கள் படு உற்சாகத்தில் களம் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆக மொத்தம்.. சூலூரில் அதிமுக, திமுக, அமமுக கட்சி வேட்பாளர்களிடையே செம டஃப் பைட் காத்திருக்கிறது.