விக்கிரவாண்டி, வேலூர்.. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா?
அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட்டினை அதிமுக உறுதி செய்துள்ளது
Recommended Video
சென்னை: அன்புமணி ராமதாசுக்கு ராஜ்ய சபா சீட் தருவதை அதிமுக தரப்பு நேற்று உறுதி செய்துவிட்டது. ஆனால் இதற்கு என்னதான் பின்னணி?
பாமகவுடன் அதிமுக கூட்டணி ஒப்பந்தம் போடும்போதே 7+1 என்று முடிவானது. +1 என்பது சவுமியா அன்புமணி அல்லது அன்புமணியாக இருக்கலாம் என்று பேசப்பட்டது.
ஆனால் சவுமியா வெளிப்படையாகவே அரசியல் வருகை பற்றி கருத்து சொல்லி விட்டார். அதனால் எப்படியும் அன்புமணிதான் ராஜ்ய சபாவுக்கு செல்வார் என்று பலமாக நம்பப்பட்டது.
மூத்த தலைவர்கள்
இதற்கிடையில், பாமகவுக்குள் 2 சர்ச்சைகள் எழுந்தன. ஒன்று, ஒரு தொகுதியில்கூட, அதுவும் சொந்த தொகுதியில்கூட ஜெயிக்காத அன்புமணிக்கு எதற்காக ராஜ்ய சபா சீட் என்று கேள்வி எழுந்தது. மற்றொன்று, எப்ப பார்த்தாலும் அன்புமணியே டெல்லிக்கு போய் கொண்டிருந்தால், கட்சிக்குள் மற்ற நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் யாருமே இல்லையா என்றும், அன்புமணிக்கு பதிலாக பாமகவின் வேலு போன்ற முக்கிய, மூத்த தலைவர்களை ராஜ்ய சபா சீட்டுக்கு பரிந்துரைக்கலாமே என்று பாமக தரப்பிலேயே பேசப்பட்டது.
அதிமுக
எனினும், இந்த 2 விஷயங்களையும் பாமக தலைமையாகட்டும், அதிமுக தலைமையாகட்டும், பெரிசாக கண்டுகொள்ளவே இல்லை. இப்போது சொன்னபடி ராஜ்ய சபா சீட்டு அன்புமணிக்குதான் என்றும் அதிமுக உறுதிபடுத்தி உள்ளது.
இடைத்தேர்தல்
ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுவிட்டதால் மட்டும் இப்படி ராஜ்ய சபா சீட்டை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கவில்லை. உள்ளுக்குள்ளே வேற விஷயமும் இருக்கு. முதல் விஷயம், அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்ததால்தான், பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் சோளிங்கர் , ஆகிய 3 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது.
வன்னியர்கள்
இரண்டாவது விஷயம், இன்னும் வேலூரில் எம்பி தேர்தல் நடக்க உள்ளது. இதுபோக, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த பகுதிகள் வன்னியர்கள் பெல்ட்டில் உள்ளவை. அதனால் பாமகவின் தயவு அதிமுகவுக்கு இனியும் தேவைப்படுகிறது.
ராஜ்ய சபா சீட்
இனி நடக்க போகும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் ஒவ்வொரு சீட்டும் அதிமுகவின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள உதவும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால்தான், பாமகவை எந்த விஷயத்திலும் அதிமுக பகை கொள்ளாமல், ராஜ்ய சபா சீட்டை தந்து, நடக்க போகும் தேர்தல்களுக்கு மறைமுக ஆதரவை கோருகிறதாக தெரிகிறது.