உள்ளாட்சி தேர்தல்.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக.. விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு
அதிமுகவில் விருப்ப மனு விநியோக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று மின்னல் வேகத்தில் அஇஅதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசியல் வட்டாரத்தை தட்டி எழுப்பியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை அடுத்த மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக - திமுக ஜரூராக தயாராகி வருகின்றன.
விட்டதை எல்லாம் இந்த உள்ளாட்சி தேர்தலில் பிடித்து விட வேண்டும் என்று திமுக தரப்பில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு, வியூகங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, இந்த உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்க உள்ளது.
துணை முதல்வர்
அதனால், கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக, தமாகா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்வரும், முணை முதல்வரும் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட மாவட்ட செயலாளர்களை அழைத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்துள்ளனர். சாதி ரீதியாக மட்டுமின்றி, அனைத்து வகையிலும், வாக்காளர்களை இழுக்க வியூகம் வகுத்து வருகிறது.
அஇஅதிமுக
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 15, 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனு
மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500ம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சி
தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிக்கான சீட் ஒதுக்கீடுகள் குறித்து இறுதி முடிவு எதுவும் வெளிவராத நிலையில், விருப்ப மனுக்கான அறிவிப்பை அதிமுக அதிரடியாக வெளியிட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.