விஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்
Recommended Video
சென்னை: தேமுதிக தலைமையுடன் அதிமுக இன்னும் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல் அம்பலமாகியுள்ளது.
தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என அதிமுக தலைமை கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் 9 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக அடம் பிடிக்கிறது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்துள்ளனர்.
ஆப்ஷன்கள்
இதனால் தேமுதிகவிற்கு தற்போது டிமாண்ட் ஏறிப்போய் உள்ளது. இந்த மடம் இல்லாவிட்டால் சந்த மடம் என்று சொல்வார்களே அதேபோல ஆப்ஷன்கள் அதிகரித்துள்ளன. இதனால் அதிமுகவுக்கு தலைவலியாகிவிட்டது. 5 தொகுதிகள் வரை வழங்க அதிமுக தயாராக இருந்த நிலையில், இப்போது இன்னும் அதிகம் கேட்கிறதாம் தேமுதிக.
மீண்டும் டிமாண்ட்
கொஞ்சம் பிடிவாதத்தை தளர்த்திய நிலையில், ஸ்டாலினே நேரடியாக சென்று விஜயகாந்த்தை பார்த்ததால், மறுபடியும் 9 தொகுதிகளே வேண்டும் என்று பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளது தேமுதிக. இதனால் வெறுத்துப்போய்விட்டது அதிமுக.
விட மனசு இல்லை
அதேநேரம், அந்த 3 சதவீத வாக்குகளை வீணாக்க கூடாது என்பதால், எப்படியாவது விஜயகாந்த் கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. இதற்காக ரகசியமாக சில அமைச்சர்கள், விஜயகாந்த், சுதீஷ் ஆகியோருக்கு போன் போட்டு பேசி வருவதாக தெரிகிறது. விஜயகாந்த்தை சும்மா இருக்கவே விடுவதில்லையாம் இவர்கள்.
பேச்சுவார்த்தை நடக்கிறது
நேற்று துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர். அவர் கூறுகையில், அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது. கூட்டணிக்காக, தேமுதிகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு நாளில், நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்றார். இதன் மூலம் பழத்தை புகைபோட்டாவது பழுக்க வைக்கும் முயற்சிகள் நடப்பது உறுதியாகியுள்ளது.