மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கான முழு தகுதி இருக்கிறது - மாஃபா பாண்டியராஜன்
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக.
சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக எனறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியிலுள்ள தர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், "மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். இருப்பினும் இது ஒரு அதிமுக தொண்டனாக என் கருத்தே தவிர அதிகாரப்பூர்வமானதல்ல என்று கூறினார்.
ரூ. 31 ஆயிரம் கோடி முதலீடு
தமிழக அரசு சார்பில் ஏப்ரல், மே ஜூன் மாதம் ரூ. 31 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இதைப் ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிமுக அரசு என்ன செய்து வருகிறது என கூட பார்க்காமல் குறை கூறி வருகிறார்.
தொழில் வளர்ச்சியில் முதலிடம்
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஜிஎஸ்டி வரி தமிழ் நாட்டில் இருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார் அமைச்சர் பாண்டியராஜன்.
நிர்வாக காரணம்
தலைமைச் செயலர் பதவி நீட்டிப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது குறித்து பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை செயலருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
விளம்பரம் நீக்கம்
தனிஷ்க் விளம்பரத்திற்கு வந்த எதிர்ப்பால் அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தனிஷ்க் நிறுவன விளம்பரம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அந்த விளம்பரம் எனக்கு பிடித்துள்ளது. பலரின் எதிர்வினை காரணமாக அந்நிறுவனம் விளம்பரத்தை நீக்கியுள்ளது. தமிழக அரசு அந்நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு. அவரவர் மதத்தில் இருந்து கொண்டு திருமணம் செய்தல் சிறப்பானது என்றும் கூறினார் அமைச்சர் பாண்டியராஜன்.