எங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க.. 2021ல் வெல்ல உதவுங்க.. 'பிகே'வுடன் கை குலுக்கும் அதிமுக!
சென்னை: 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரசாந்த் கிஷோரை அதிமுக அணுக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பி.கே. என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை தெரியாத அரசியல் கட்சியினரே கிடையாது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் வியூகங்களை வகுத்து கொடுக்கும் IPAC நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக வியூகம் வகுத்து தந்தார். அதுபோல் 2014-இல் மோடி பிரதமராகவும் வியூகம் வகுத்தார். அது போல் காங்கிரஸ் கட்சி, நிதிஷ்குமார் வெற்றிக்கும் பெரிதும் உதவியுள்ளார் கிஷோர்.
நீர் வள மேலாண்மையில் பூஜ்யம்! சாராய சாம்ராஜ்யம் மட்டுமே! கொந்தளிக்கும் மக்கள்!
அமோகம்
சமீபத்தில் ஆந்திரத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை கடந்த 2017-ஆம் ஆண்டே அணுகினார். அவர் வகுத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது.
மம்தா பானர்ஜி
அத்துடன் சந்திரபாபு நாயுடுவின் சாம்ராஜ்ஜியத்தையே தகர்க்கும் அளவுக்கு வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வியூகம் வகுக்க மம்தா பானர்ஜி கிஷோரை அணுகியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோரை அணுகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார்.
கட்டாயத்தில் அதிமுக
இந்த நிலையில் அவர் நாளை ஐபேக் நிறுவன அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சட்டசபை இடைத்தேர்தலில் 22 இடங்களில் 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல்வர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இல்லாததாலும் ஒற்றை தலைமை பிரச்சினை உருவெடுத்ததாலும் எப்படியாவது 2021- தேர்தலில் வெற்றியை குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக உள்ளதால் அவர்கள் பிரசாந்த் கிஷோரை நாடுகின்றனர்.