அதிமுக நீட்டை எதிர்க்கவில்லை.. எதிர்த்தால் சமாதானம் செய்வோம்.. பியூஷ் கோயல் பகீர் பேட்டி!
அதிமுகவினர் நீட்டை எதிர்க்கவில்லை, அப்படியே எதிர்த்தால் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வோம் என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவினர் நீட்டை எதிர்க்கவில்லை, அப்படியே எதிர்த்தால் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வோம் என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.
அதிமுகவின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற கோரிக்கையை பாஜக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வந்த பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.
என்ன பேட்டி
பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தனது பேட்டியில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. மாநில அரசும் இதில் முடிவு எடுக்க முடியாது. இதில் முடிவு தமிழக ஆளுநரின் கையில்தான் உள்ளது. அவர்தான் சரியான முடிவை இதில் எடுக்க வேண்டும்.
ரஜினி நதிகள் இணைப்பு
பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி வரவேற்பு அளித்துள்ளார். இது பாஜகவினருக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. ரஜினிக்கு பாஜக சார்பாக நன்றி. நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும்.
நீட் இருக்கும்
நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறது. ஆனால் நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. அதிமுக நீட் தேர்வை எதிர்க்கவில்லை.
அதிமுக அப்படி
நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். அதிமுக நீட் தேர்வை எதிர்த்தால் அவர்களை நாங்கள் சமாதானம் செய்வோம். அதிமுக எதிர்க்கும் பட்சத்தில் அவர்களிடம் நாங்கள் பேசுவோம், என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டு இருக்கிறார்.