எல்லாம் ஜெயலலிதாவிடம் கற்ற வித்தை.. மொத்தமாக இறக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்.. புல்லட் ரயில் வேகத்தில் அதிமுக
சென்னை: ஒரே நாளில் 8 ஆயிரம் பேரிடம் நேர்காணல் நடத்தியது, முதல் ஆளாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதாவிடம் கற்ற வித்தைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா காலத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுகவுக்கு முன்பாக வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்துவது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, பிரச்சாரத்தை தொடங்குவது என அனைத்திலும் வேகம் எடுக்கப்படும்.
1996 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தேர்தல் அறிக்கையை வெளியிடுவதிலும் அதிமுக நம்பர் ஒன் கட்சியாக இருந்தது. அந்த ஆண்டு இலவச கலர் டிவி கொடுப்பதாக திமுக தேர்தல் அறிக்கை வெளியானதும் திமுக ஆட்சி அமைத்தது.
தேர்தல் அறிக்கை
இதற்கு முழு காரணம் திமுகவின் தேர்தல் அறிக்கை அந்த தேர்தலில் கதாநாயகனாக இருந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜெயலலிதா அடுத்த முறை தேர்தல் அறிக்கையை மட்டும் திமுக வெளியிட்டவுடன் வெளியிடுவதை ஜெயலலிதா வாடிக்கையாக கொண்டிருந்தார்.
நேர்காணல்
இதே பாணியைதான் தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் பின்பற்றி வருகிறார். 8,241 விருப்பமனுக்களை பெற்று நேற்று முன் தினம் ஒரே நாளில் நேர்காணல் மாவட்டம் வாரியாக நடைபெற்றது. ஒரே நாளில் 8200 பேர் என்றால் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்தான்.
முதல் பட்டியல்
அது போல் நேற்றைய தினம் வேட்பாளர் பட்டியலையும் முதல் கட்சியாக அதிமுக வெளியிட்டது. முதலில் 6 பேரது வாக்காளர்களை வெளியிட்டுவிட்டார் ஓபிஎஸ். 3 முறை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். அது போல் எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார்.
இரட்டை குழல் துப்பாக்கி
இதனால் தேர்தலில் ஜெயலலிதா பயன்படுத்தும் நுணுக்கங்களில் கைதேர்ந்த இவர்கள் இது போல் செய்து வருகிறார்கள். ஒரு பக்கம் திட்டங்களை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேகமெடுக்கிறார். மறுபக்கம் கட்சி பணிகளில் பன்னீர் செல்வம் வேகமெடுக்கிறார். இருவரும் இணைந்து இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுகிறார்கள்.
அதிமுக வெளியீடு
ஆனால் தேர்தல் அறிக்கையை மட்டும் திமுக வெளியிட்டவுடன்தான் அதிமுக வெளியிடும். இது அண்மைகால தேர்தல்களில் ஜெயலலிதா பின்பற்றிய பாணி. இதைத்தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த வேகம் இவர்களின் வெற்றிக்கு எப்படி கைக் கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.