லோக்சபா தேர்தலில் தோற்றிருக்கலாம்.. இடைத் தேர்தல்களில் அதிமுக அசத்துகிறதே எப்படி? சீக்ரெட் இதுதான்
Recommended Video
சென்னை: சும்மா சொல்லக்கூடாது.. ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமையின் மறைவுக்கு பிறகும் கூட, அதிமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவில்லை என்பதை அடுத்தடுத்த தேர்தல் முடிவுகள் அறுதியிட்டு கூறிவிட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டன. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார்.
ஒருவழியாக, அந்த விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கண்கள் பணிக்க, அணிகள் இணைந்தன. இதன்பிறகு டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வாக்குகளை இழுத்து ஆர்கே நகரில் அதிரடி வெற்றியை பெற்றார்.
சவால்கள்
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில், டிடிவி தினகரன் கட்சி மக்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதனால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அந்த கட்சி போட்டியிடாமலேயே ஒதுங்கிக் கொண்டது. அந்த வகையில் அதிமுக தனது அடுத்த சவாலையும் தாண்டி வந்தது.
ஆட்சி தக்க வைப்பு
லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மினி சட்டசபை தேர்தல் என்று அது வர்ணிக்கப்பட்டது. ஏனெனில் அதில் சற்று சறுக்கி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பெரும்பான்மை இன்றி கலைந்து போயிருக்கும். ஆனால் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது அதிமுக. ஒருபக்கம் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியை தவிர பிற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையிலும், அதே நேரத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
செல்வாக்கு
இதோ இப்போது, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், திமுக கூட்டணியிடமிருந்து தொகுதிகளை கைப்பற்றி அசத்தி விட்டது அதிமுக. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கு பெரிதாக சரியவில்லை என்பது உறுதியாகி உள்ளதோடு, திமுக கூட்டணியில் உள்ள தொகுதிகளை கூட இழுக்கும் அளவுக்கு செல்வாக்கு வளர்ந்து விட்டது என்றும் இதை பொருள் கொள்ள முடியும்.
மத்தியில் வேறு கணக்கு
அப்படியானால் லோக்சபா தேர்தலில், அதிமுக பெரிதாக சாதிக்க முடியவில்லையே ஏன் என்ற கேள்வி எழலாம். இதுதொடர்பாக சில அரசியல் விமர்சகர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் கூறுகையில், லோக்சபா தேர்தல் மோடியா அல்லது ராகுல் காந்தியா என்ற முழக்கத்தை முன்வைத்து நடந்தது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், அப்போது மோடி எதிர்ப்பு அலை வீசியது. எனவே, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். அது அதிமுகவுக்கு எதிரான வாக்கு இன்று நாம் சொல்லிவிட முடியாது. அப்படி மக்கள் நினைத்திருந்தால் அதே நேரத்தில் நடைபெற்ற 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவை எப்படி வெற்றி பெற வைத்து இருப்பார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வேலூர் பார்முலா
மக்களின் எதிர்ப்பு நமக்கானது கிடையாது என்பதை அதிமுக தலைமையும் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறது. வேலூருக்கு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது பாஜக தலைவர்கள் யாரையும் பிரச்சாரத்திற்கு அதிமுக அழைத்துச் செல்லவில்லை என்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதிமுக தலைமை நினைத்ததுபோலவே, வேலூர் தொகுதியிலும் வெற்றி கைக்கு அருகே வந்தது. ஆனால், சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுகவால் அங்கு வெற்றி பெற முடிந்தது.
வியூகம்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியிலும் கூட, பாஜக மேலிடத் தலைவர்களை, பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை. ஆனால் நாங்குநேரி தொகுதியில் பாஜகவிற்கு சுமார் 10 ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கிறது என்பதுதான் களநிலவரம். அந்தவகையில் முன்னாள் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் அங்கு தேர்தல் பணிகளில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார் என்பதை மறுக்க முடியாது.
இடைத் தேர்தல்களில் வெற்றி முகம்
ஆக மொத்தம், காங்கிரஸா, பாஜகவா என்று வரும்போது மக்கள் காங்கிரஸ் பக்கம் வாக்களித்துள்ளார்கள். ஆனால் திமுகவா, அதிமுகவா என்று வரும்போது மக்கள் அதிமுகவை கைவிடவில்லை என்பது நடைபெற்று முடிந்த சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நமக்கு உணர்த்தக்கூடிய பாடமாக இருக்கின்றது. ஏனெனில் கடந்த லோக்சபா தேர்தல் காலகட்டத்தில் இருந்து, இதுவரை தமிழகம் 24 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களைச் சந்தித்து விட்டது. அதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளையும் சேர்த்து 11 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து ஆட்சி
தொடர்ந்து எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது அதிமுக. ஜெயலலிதா போன்ற ஆளுமை மறைவுக்குப் பிறகு, இப்போது இரட்டை தலைமையின் கீழ் கட்சி செயல்படுகிறது. கட்சியின் வாக்குகள் வேறு சில தலைவர்களாலும் சிதறடிக்கப்பட்டது. இப்படியெல்லாம் பல சவால்கள் இருந்தபோதிலும், இத்தனை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில், அதிமுக வெற்றி பெற்றிருப்பது என்பது அந்தக் கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய நாடிகணிப்பாக பார்க்கப்படுகிறது.