மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடிக்க புதிய ஆப்.. களமிறங்கிய அதிமுக.. விசில் ரிப்போர்ட்டர்!
மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடிப்பதற்காக அதிமுக கட்சி சார்பாக விசில் ரிப்போர்ட்டர் என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடிப்பதற்காக அதிமுக கட்சி சார்பாக விசில் ரிப்போர்ட்டர் என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் இன்னும் தமிழகத்தை அதிர்ச்சியில் வைத்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.
பல மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டும் எதிர்பாராத விதமாய் குழந்தை பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை தந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையே மிகப்பெரிய துயரில் இந்த சம்பவம் ஆழ்த்தியுள்ளது.
ஆழ்துளை கிணற்றை சுற்றி கூட்டம்.. தலைகீழாக உள்ளே இறக்கப்படும் இளைஞர்.. ஒரு பாசிட்டிவ் மெசேஜ்!
கிணறு எப்படி
இந்த நிலையில் திறந்து இருக்கும் ஆழ்துளை கிணறுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை, திறந்தவெளி, நீர்உறிஞ்சிக் கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
விதிமுறைகள்
அதேபோல் இதில் புதிய விதிகள் பலவற்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? எனவும் தமிழக அரசு இனி கவனம் செலுத்தும். இதில் முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம்
இந்த நிலையில்தான் அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இதற்காக ஆப் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. "WhistleReporter" என்று இந்த செயலிக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இது மிக எளிதாக இந்த ஆப் செயல்படும். இந்த ஆப்பை கூகுள் பிளேவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
என்ன விவரம்
அதன்பின் அதில் உங்கள் விவரங்களை கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும். அதன்பின் உங்களுக்கு தெரிந்த பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் அருகே சென்று, இந்த செயலியில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். நேரடியாக அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு புகார் சென்றுவிடும்.
என்ன பொத்தான்
நீங்கள் எங்கிருந்து இந்த பொத்தானை அழுத்துகிறீர்களோ அந்த பகுதியின் லொகேஷன் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு சென்றுவிடும். இதை வைத்து எந்தெந்த இடங்களில் தேவையற்ற ஆழ்துளை கிணறுகள் உள்ளன என்ற மேப் உருவாகும். பின் அதிமுக கட்சி அதை மூட நடவடிக்கை எடுக்கும்.