அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக 16 வயதில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதிமுக தொண்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர். சென்னையின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் மதுசூதனன்.
எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் அவைத்தலைவராக இருந்தார்.
கடந்த 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.
அவர் இருக்கும் வரை அவர்தான் என்றுமே அவர்தான் அவைத்தலைவர் என்று கூறினார் ஜெயலலிதா.
2017ஆம் ஆண்டு ஒபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். மீண்டும் கட்சி ஒன்றாக இணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவின் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
Flashback: 2017இல் அவைத் தலைவர் பதவியை பறித்த சசிகலா.. பதிலுக்கு மதுசூதனன் செய்த சம்பவம்
கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல அவர் மீண்டார். இருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மதுசூதனன் மறைவுக்கு அதிமுக தலைவர்களும் பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்ணன் மதுசூதனின் மறைவு அதிமுகவிற்கு பெரிய இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொண்டனுக்கு ஒரு பிரச்சினை என்றால் தோளோடு தோள் நின்றவர் மதுசூதனன் என சைதை துரைசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ் இபிஎஸ் இரங்கல்
மதுசூதனின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். அஞ்சாநெஞ்சன் என்று கம்பீரமாக அழைக்கப்பட்டவர் மதுசூதனன். திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட போது போராட்டம் நடத்தி சிறை சென்றவர். கட்சிக்காக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார் 48 முறை சிறை சென்றுள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். 70 ஆண்டுகாலம் எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுகவின் புகழ் பாடி உண்மையாக தொண்டராக இருந்தவர் மதுசூதனன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை தர வேண்டும். அன்னாரது ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பார ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பில் பிராத்தனை செய்கிறோம். அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.