அதிமுகவில் சசிகலா இணைப்பு? தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
மதுரை: சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதேநேரம், "இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது" என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில், இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓபிஎஸ்சுக்கு அந்த விஷயத்தை நினைவுபடுத்துகிறேன்! ஜெயக்குமார் பதிலடி! அதிமுகவில் வலுக்கும் மோதல்!
ஏற்குமா இல்லையா
சசிகலாவை அதிமுக ஏற்குமா? என்று பன்னீர் செல்வத்திடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்று தெரிவித்தார்.
தொண்டர்கள் இயக்கம்
இரட்டை தலைமை குறித்த கேள்விக்கும், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றிய கேள்விக்கும் பதிலளித்த ஓபிஎஸ்,
அதிமுக தொண்டர்களின் இயக்கம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று பதிலளித்தார்.
தலைமை கழக நிர்வாகிகள்
அதேநேரம், அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று அவர் கூறினார்.
அதிமுக மோசமான தோல்வி ஏன்
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மோசமாக தோல்வியடைந்தது. உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது இயல்பான விஷயம் என்று இதை கடந்து செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது அதிமுக.
திமுக மீது குற்றச்சாட்டு
பல்வேறு முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் காரணமாக திமுக வெற்றி பெற்றுவிட்டது என்று அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூறி வந்தாலும் கூட சசிகலா அதிமுகவில் இருந்தால் இந்த அளவுக்கு மோசமான தோல்வி கிடைக்காது என்று அரசியல் விமர்சகர்கள் பார்வையை முன் வைக்கிறார்கள்.
சசிகலா ஆசை
சமீபத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். மேலும் தனது காரில் அதிமுக கொடியை அவர் கட்டியிருந்தார். இதன்மூலம் அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை, மீண்டும் மீண்டும் சசிகலா வெளிக்காட்டி வருகிறார். ஆனால், அதிமுக தலைமை அதை ஏற்பதாக இல்லை.
சுற்றி வளைத்து பதில்
சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்திருந்தார். இப்படியான நிலைமையில் தான் ஓ பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி முக்கியமாக பார்க்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் சசிகலா இல்லாத அதிமுகவுக்கு அதிக அளவு வாக்குகள் வரவில்லை என்ற விமர்சனங்கள் இருக்கும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக பதில் சொல்லாமல் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு சுற்றிவளைத்து பதில் சொல்லிவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.