அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை.. எச்.ராஜாவை விளாசிய அதிமுக நிர்வாகி.. என்னாச்சு?
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காத விவகாரம், அதிமுக மற்றும் பாஜக இடையே பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, விநாயகர் சிலை தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் அளித்துள்ள காரசார பதிலடி, இந்த ஐயப்பாட்டை உறுதி செய்வது போல உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
முதல்வர் முடிவில் மாற்றமில்லை
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் அனுமதி இல்லை என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இது, இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. சில இந்து அமைப்பின் நிர்வாகிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தடையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
பாஜக தலைவர் வேண்டுகோள்
இந்த நிலையில்தான், கடந்த திங்கள்கிழமை இரவு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரடியாகவே, சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்துக்கு சென்று அவரிடம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பான தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முருகன், முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார், என்று அப்போதே தகவல்கள் வெளியாகியிருந்தன.
தமிழக அரசு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், இதுவரை தமிழக அரசு தனது உத்தரவை வாபஸ் பெறவில்லை. மேலும், விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடிய இடங்களுக்கு அதிகாரிகள் சென்று சீல் வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது பாஜக தலைவர்களை கோபப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தை எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளிப்படுத்தியிருந்தார்.
ஆண்மையுள்ள அரசு
கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பதிவில், "கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு." இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சர்மாக்கள் சான்று
இதையடுத்து அந்த வீட்டை ஷேர் செய்த அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன் @HRajaBJP" இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பரபரப்பு
நேரடியாக எச்.ராஜா போன்ற பாஜக முக்கிய தலைவரை கடுமையான விமர்சனம் செய்துள்ளார் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி என்பதால் இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட கெடுபிடிகளால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டதோ என்று கூறும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
கூட்டணியில் பிளவு?
பாஜக தலைவர் முருகன் கேட்டுக்கொண்ட போதிலும் முதல்வர் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களிலும் இரு கட்சி பிரமுகர்களும் இப்படி வெளிப்படையாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் அடுத்து எதை நோக்கிச் செல்லப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.