ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக!
சென்னை: திராவிட பெரும் இயக்கங்களான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே பேசிப்பேசி பேச்சாலேயே வளர்ந்தன. அண்ணாதுரை ஆவடியில் பேசுகிறார் என்றால், திருச்சியிலிருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு குடும்பத்தோடு போன வெறி தொண்டர்கள் உண்டு.
கருணாநிதி நெல்லை மாநாட்டில் பேசுகிறார் என்றால், அந்த காலத்திலேயே விமானத்தில் பறந்து வந்த அனுதாபிகள் உண்டு. ஜெயலலிதாவின் தெறி பேச்சைக் கேட்க உயிரைப் பொருட்படுத்தாது கட்டிடங்களில் ஏறி தொங்கும் தொண்டர்களைப் பார்த்திருக்கிறோம்.
இப்படித்தான் அவ்விரு கட்சிகளும் வளர்ந்து நிற்கின்றன. கருணாநிதிக்குப் பின் தி.மு.க.வை தாங்கி நிற்கும் ஸ்டாலினிடம் அவரளவுக்கு சாதுர்யமான பேச்சுத் திறன் இல்லை என்பது குறைதான். ஒப்புக் கொள்ள வேண்டும், ஆனாலும் மனிதர் தரவுகளை தயார் பண்ணி வைத்து வந்து சாமர்த்தியமாய் சமாளிக்கிறார்.
மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அதிமுக பேச்சாளர்கள்
ஆனால் ஜெயலலிதாவுக்கு பிந்தைய அ.தி.மு.க.வோ பல விஷயங்களில் திணறுவது போல் பேச்சாற்றலிலும் திணறுகிறது. அட, எதுகை மோனையெல்லாம் போட்டு இலக்கிய நயம் சொட்டச் சொட்ட யாரும் அக்கட்சி வி.ஐ.பி.க்களை பேசச் சொல்லவில்லை. அப்படி பேசுவது இப்ப டிரெண்டும் இல்லை. யதார்த்தமாக, நேர்மைத் தன்மை தொனிக்க, பொதுநலத்துடன் , கொள்கைப் பற்று மிளிரப் பேசுவதைத்தான் அக்கட்சியின் தலைவர்களிடம் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிரிப்பு தூக்கலா இருக்கு
ஆனால் அ.தி.மு.க.வின் அமைச்சர் பெருமக்கள் பேசுவதெல்லாம் எந்த ரகத்தில் உள்ளது என்பதை உலகமறியும். திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோரிடம் மைக்கை நீட்டினால் நிச்சயம் நான்கு நாட்களுக்கு சிரிக்கச் சிரிக்க தகவல்கள் தேறும் என்பதாலேயே அவர்களை துரத்தித் துரத்தி பேட்டி எடுக்கின்றன மீடியாக்கள்.
ராஜு பேச்சு
அந்த வகையில், சமீபத்தில் பால்விலை ஏற்றம் பற்றிப் பேசியிருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ "தமிழக பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்ன கருத்தும் சரிதான். அத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக முதல்வர் சொன்ன கருத்தும் சரிதான். அதெப்படி ரெண்டும் சரி? என்கிறீர்களா! அதாவதுங்க, தமிழ்நாட்டில் பால் வள ஒன்றியங்கள் நிறைய இருக்கிறது. இதில் சில சங்கங்கள் லாபத்திலும், சில சங்கங்கள் நஷ்டத்திலும் இயங்குகிறது. ஆக லாப சங்கங்களை பற்றி அமைச்சரும், நஷ்ட சங்கங்களை பற்றி முதல்வரும் சொல்லியிருக்காங்க. அவ்வளவுதான்." என்றிருக்கிறார்.
ஜாலி பேச்சு
இந்த பேட்டியை பற்றி இதற்கு மேல் விளக்க, விமர்சிக்க என்ன இருக்கிறது? அம்மாவின் ஆன்மாவுக்கே வெளிச்சம். அதேசமயம், இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்களின் செயல்பாடுகள் படு சுறுசுறுப்பாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஹும், என்ன பேசினாலென்ன, எப்படி பேசினாலென்ன ஆட்சிக்கு ஆபத்தில்லை என்பதால் டோண்ட் ஒர்ரீ, பீ ஹேப்பி!தான் போங்கள்.
- ஜி.தாமிரா