தனியாக நிற்க தயார்.. எடப்பாடிக்கு நம்பிக்கை அளித்த ரிப்போர்ட்.. 2021க்கு அதிமுக பக்கா பிளான்!
2021ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி தனியாகவே போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
சென்னை: 2021ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி தனியாகவே போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
2021 சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இப்போதே கூட்டணி கணக்குகளாக அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டது. எந்த கப்பலில் யார் செல்வார்கள், யார் பாதியில் இறக்கி விடப்படுவார்கள் என்று இப்போதே அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டது.
2021 சட்டசபை தேர்தலுக்கு திமுக அதே கூட்டணியுடன்தான் போட்டியிடும் என்று கூறுகிறார்கள். அதே விசிக, மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணியுடன்தான் திமுக போட்டியிடும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அதிமுக
ஆனால் இன்னொரு பக்கம் அதிமுக புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக கடந்த ஒரு மாதமாக ஆலோசனை செய்து வருகிறது. இதில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்யும் என்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிற்கு பெரிய பலன் இல்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் பாஜக கூட்டணி அதிமுகவிற்கு உதவவில்லை.
தனியாக எப்படி
பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்யாத ஊரக உள்ளாட்சி தேர்தலில் லோக்சபா தேர்தலை விட அதிமுக கொஞ்சம் நன்றாகவே இடங்களை பிடித்து இருந்தது. இதனால் அதிமுக பாஜக உடனான கூட்டணி குறித்து மீண்டும் யோசித்து வருகிறது என்கிறார்கள். அதேபோல் பாஜகவும் ரஜினி பக்கம் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறது. விரைவில் அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்.
என்ன மாற்றம்
இன்னொரு பக்கம் அதிமுகவிடம் எம்பி பதவி கேட்டு தேமுதிக நெருக்கி வருகிறது. இதனால் தேமுதிகவை எப்போது வேண்டுமானாலும் அதிமுக கழற்றி விடலாம், தேமுதிகவால் அதிமுகவிற்கு பலன் இல்லை என்றும் கூறுகிறார்கள். மேலும் பாமகவும் நடிகர் ரஜினியிடம் நெருக்கம் காட்டி வருகிறது, அதிமுக அரசை அடிக்கடி விமர்சித்து வருகிறது. அதேபோல் அன்புமணி ராமதாஸ் துணை முதல்வர் பதவிக்கும் அடிபோட்டு வருகிறார். இதனால் பாமகவுடன் அதிமுக உறவு விரைவில் விரிசலை சந்திக்க வாய்ப்புள்ளது.
தனியாக போட்டி
ஆகவே 2021 சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட அதிமுக திட்டமிடுகிறது என்று கூறுகிறார்கள். இதற்கு காரணங்கள் இருக்கிறது. அதிமுகவின் 30+ சதவிகித வாக்கு வாங்கி இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியை பெற்றுவிட்டது.
உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு இணையாக இடங்களை வென்றது. 5 மற்றும் 8 வகுப்பு பொது தேர்வு ரத்து, பாதுக்கக்கப்பட்ட டெல்டா மண்டல அறிவிப்புகளால் அதிமுகவிற்கு நிறைய நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தனியாக போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக அதிமுக தலைமைக்கு முக்கிய ரிப்போர்ட் ஒன்றும் அதிகாரிகள் சார்பாக அனுப்பட்டுள்ளதாம்.
என்ன ரிப்போர்ட்
அதன்படி அதிமுக தனியாக நின்றாலும் 90+ இடங்களை கண்டிப்பாக வெல்லும் என்று கூறியுள்ளனர். இதனால் தைரியமாக களமிறங்கலாம் என்றும் நம்பிக்கை அளித்துள்ளனர். ஆகவே அதிமுக தனியாக, ஜெயலலிதா பாணியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அதிமுகவின் மெகா கூட்டணியில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.
என்ன நன்மை
இப்படி தனியாக போட்டியிடுவதில் இன்னொரு நன்மையையும் இருக்கிறது. வாக்குகள் எப்படியும் ஒரே பக்கம் குவியாது. பாஜக - ரஜினி கூட்டணிக்கு சில இடங்களும், அதிமுகவிற்கு கொஞ்சம் இடங்களும், திமுகவிற்கு கொஞ்சம் இடங்களும் செல்ல வாய்ப்புள்ளது. அப்போது தேர்தலுக்கு பின் அதிமுக - பாஜக - ரஜினி கூட்டணி உருவாகும் என்றும் கூறுகிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் திமுக இப்படித்தான் தோல்வி அடைந்தது.
வரலாறு
திமுக 2016 தேர்தலில் அதிகம் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட வாக்குகள் சிதறியதால் தோல்வி அடைந்தது. திமுக இப்படி தோல்வி அடைய முக்கிய காரணம் அப்போது தேமுதிக, விசிக, மதிமுக, பாஜக எல்லாம் சேர்ந்து உருவாக்கிய மக்கள் நல கூட்டணியால் பெரிய அளவில் வாக்குகள் சிதறியது. இதனால் திமுக நூல் இழையில் வெற்றியை நழுவவிட்டது. தற்போது அதேபோல் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
கூட்டணி வைக்கவில்லை
பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று இடங்களை வெல்லலாம். பாஜக - ரஜினி கூட்டணி தனியாக நின்றால் வாக்குகள் சிதறும். தேர்தலுக்கு பின் கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம் என்று அதிமுக திட்டமிடுகிறது என்கிறார்கள். அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டிலும் இது தொடர்பான விவரங்கள்தான் இருக்கிறது என்கிறார்கள். இதனால் அதிமுக பெரும்பாலும் சட்டசபை தேர்தலில் தனியாக களமிறங்க வாய்ப்புள்ளது.