175+ தொகுதிகளுடன் அதிமுக செம்ம பிளான்.. இன்னும் 6 நாளில் அதிரடி அறிவிப்பு? ரெடியாகும் பட்டியல்
சென்னை: பாமகவை தொடர்ந்து பாஜக, தமாக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் எத்தனை தொகுதி என்பதை இறுதி செய்துவிட்டு, விரைவாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கான பணியில் அதிமுக இறங்கியுள்ளது. தற்போது விருப்ப மனுக்கள் பெற்று வருவதால், 5ம் தேதி முதல் நேர்காணல் நடத்தி, வரும் மார்ச் 8-ம் தேதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட அதிமுக மேலிடம் தயாராகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற போகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே இருக்கும் அதற்கு கூட்டணியை இறுதி செய்வதற்கான பணிகளையும் தொகுதிகளை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவிக்கும் பணியிலும் அதிமுக தீவிரமாக உள்ளது.
எந்தெந்த கட்சிகள்
பாமக உடன் கடந்த மாதம் 27-ந்தேதி அதிமுக கூட்டணி உடன்படிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பாஜக, தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. நிலையில், அடுத்த கட்டமாக தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேசப்பட உள்ளது. இதுதவிர,கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக்கட்சி, ஜான்பாண்டியன் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம் பெற உள்ளது.
3 தொகுதிகள்
இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் தலைவர் டாக்டர் சேதுராமன் அதிமுக அலுவலகத்தில் நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் தரப்பில் 3 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது, அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நீடிக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்தது. காரைக்குடி, சிவகங்கை, திருவாடானை, மதுரை வடக்கு, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், கடையநல்லூர் ஆகியவற்றில் ஏதேனும் 3 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். விரைவில் முடிவை தெரிவிப்பதாக சொன்னார்கள் என்றார்.
175க்கு மேல் போட்டி
பாஜகவிற்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்க அதிமுக விரும்புகிறதாம். ஒருவேளை தேமுதிக வராத பட்சத்தில் அந்த தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி தேர்தலை சந்திக்கவும் அதிமுக ஆயத்தமாகி வருகிறது. சுமார் 175 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்பதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உறுதியாக உள்ளனர்.
மார்ச் 8ல் வெளியீடு
அதற்கு ஏற்றார் போல் கூட்டணியை இறுதி செய்துவிட்டு, விரைவாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கான பணியில் அதிமுக தயாராகி வருகிறது. விருப்ப மனுக்கள் மீது விரைவாக நேர்காணல் நடத்தி, வரும் மார்ச் 8-ம் தேதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் பரபரப்பு
அதிமுக சார்பில் வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு கடந்த 24 தேதி முதல் விருப்ப மனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருப்பமனுக்கள் மார்ச் 5-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது சீட் வாங்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே உள்ளவர்கள் தவிர புதிதாக அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.