அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்?
சென்னை: விரைவிலேயே அதிமுகவைச் சேர்ந்த இருவருக்கு, மத்திய அமைச்சர் பதவி யோகம் அடிக்க போகிறது என்று டெல்லி வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றன.
அதில் ஒருவர் யாரென்று நீங்களே இந்நேரத்துக்கு கெஸ் செய்திருப்பீர்கள். மற்றொருவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.. வாருங்கள் பார்ப்போம்:
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் நின்று களம் கண்டன.
தேனி வெற்றி
இந்த கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே தொகுதி, தேனி. அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்று, லோக்சபாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்பதால் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபித்து விட்டார் என்ற பேச்சுக்கள் அப்போது வெளிவந்தன. தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த, ஒரு சில இடங்களில் தேனி நகரம் ஒன்று. அப்போது, அங்கு பிரதமரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ரவீந்திரநாத். அப்போதே மோடி தனது குட் புக்கில் இவரது பெயரை, டிக் செய்து விட்டார் என்கிறார்கள்.
அமைச்சர் பதவி
அதேநேரம் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை விடவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக அமோக பலத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இதனால், கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவை இல்லாமல் போனது. எனவே, ரவீந்திரநாத்திற்கு, மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்காமல் சென்றது. இந்த நிலையில்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவி வருகிறது. இது ஏன் என்று மேலிடத் தலைவர்கள் ஆலோசித்த போது, கூட்டணி பலவீனமாக இருப்பதுதான் முக்கிய காரணம் என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளனர். எனவே கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
சட்டசபை தேர்தல்
அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது அதிமுகவிடம் கணிசமான சட்டசபை தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடும் திட்டத்தில், பாஜக உள்ளது. அதற்கு வசதியாக அதிமுகவிற்கு இரு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது என்று மோடி திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கூட்டணி கட்சியை கூல் செய்தது போலவும், ஆயிற்று. சட்டசபை தேர்தலில் அதிக சீட்டுகளை கம்பீரமாக கேட்டுப் பெறவும் வசதி உருவாகும் என்று நினைக்கிறதாம், பாஜக தலைமை.
குடியுரிமை சட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற முக்கியமான விஷயங்களில் பாஜகவுக்கு தோளோடு தோள் நின்று உதவிசெய்து வருகிறது அதிமுக. தமிழகத்திலும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களைப் பார்த்து அதிமுக அரசு அசரவில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கும் பாஜக, தங்களது ஆருயிர் தோழனாக மாறிவிட்ட அதிமுகவுக்கு, அமைச்சர் பதவிகளை வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளதாம் பாஜக.
வைத்திலிங்கம்
அதில் ஒருவர் ஏற்கனவே கூறியபடி ரவீந்திரநாத். மற்றொருவர் ராஜ்யசபா எம்பியாக அதிமுகவின் சீனியர் தலைவர் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சருமான வைத்திலிங்கம் என்று கூறப்படுகிறது. தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் முன்னிலைப்படுத்தப் படுவது குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவரது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது, முணுமுணுப்பை கட்டுப்படுத்தவும் உதவும். இது ஒருவகையில் அதிமுகவுக்கும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நன்மை பயக்கக் கூடிய விஷயம்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.