அதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு??
Recommended Video
சென்னை: அதிமுக கூட்டணியில் விலகல்களும், விரிசல்களும் விழ ஆரம்பித்துள்ளது. பாஜக அதிமுகவை கைகழுவ எண்ணுகிற அதே வேளையில் அதிமுக தேர்தலுக்கு முன்னர் வாக்களித்தபடி பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்காது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆகவே மீண்டும் 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் திமுகவுக்கு 3 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். அதிமுகவுக்கு இருக்கும் மூன்று இடங்களுக்கு இப்போதே கடுமையான போட்டி நடந்து வருகிறது.
அதிமுக பாமகவோடு தேர்தலுக்கு முன்னர் செய்யப்பட ஒப்பந்தப்படி ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தை அதிமுக, பாமகவுக்கு வழங்காது என்றே தெரிகிறது. இதில் ஒரு இடத்தை பாஜகவும் கேட்டு வருவதால் அதிமுக தர்மசங்கடத்தில் உள்ளது. அதே வேளையில் கட்சியினரை சமாளிக்க அதிமுக 3 இடங்களையும் தன்னிடமே வைத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
பெரும் போட்டி
அதிமுகவில் உள்ள இந்த இடங்களுக்காக கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தன் அண்ணனுக்காக அமைச்சர் சண்முகம், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன், கோகுல இந்திரா, ரபி பெர்னார்ட் என்று பலரும் முதல்வருக்கு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதோடு இப்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோசத்தின் சத்தம் சற்று அதிகமாகவே கேட்க தொடங்கியுள்ளது. அதோடு பாமக ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள பூந்தமல்லி, திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த தொகுதிகளில் பாமக இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அதிமுக வென்றிருக்கும் என்று அதிமுகவினர் எண்ணுகின்றனர். ஆகவே இதற்கு மேல் பாமகவை தூக்கி சுமக்க வேண்டாம் என்பதே அதிமுகவின் தற்போதைய நிலை.
தூக்கி சுமக்க ரெடியில்லை
முனுசாமி போன்றோரும் இதே கருத்தை முதல்வரிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதனால் எடப்பாடி கட்சியினரை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருகிறார். இந்த நிலையில் பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கினால் அது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை உருவாக்கும் என்றே எடப்பாடி கருதுகிறாராம். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மக்களவைத் தேர்தலுக்காக போடப்பட்ட ஒப்பந்தப்படி செயல்படுத்தலாம், பாமக உதவியோடு ஒரு மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்னும்போது ராஜ்யசபா சீட்டை ஏன் வழங்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம்.
ராமதாஸ் அடித்த பல்டி
அதிமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே அரசை கடுமையாக சாடி வந்த ராமதாஸ் மக்களவை தேர்தல் நெருங்கி வந்தபோது அதிமுகவை சற்று பாராட்ட தொடங்கினார். இந்த ஆண்டு ஆளுநர் உரையை பாராட்டி அவரது அறிக்கை வெளிவந்தபோதே ராமதாஸ் அதிமுகவோடு நெருங்க ஆரம்பித்து விட்டார் என்பது பாமகவினருக்கும் தெரிய தொடங்கியது. இந்த நிலையில் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட் தராது என்ற தகவல் ராமதாசுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனக்கு எம்.பி. பதவி கேட்டு பாஜக தலைவர் அமித் ஷா மூலமாக தீவிர முயற்சி செய்து வருகிறாராம். அதிமுக தரப்பிலும் தங்களுக்கு சாதகமான சூழல் இல்லாததால் ராமதாஸ் கோபத்தில் இருக்கிறார்.
மாறும் அறிக்கைகள்
இதையடுத்து பாமக தரப்பில் இருந்து வெளிவரும் சில அறிக்கைகள் தொனி மாறத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து நேற்று ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்' என்று தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்வது போல கண்டித்திருந்தார்.
அரசுக்கு அறிவுரை
மற்றொரு அறிக்கையில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செய்வது போல தமிழக அரசும் மாவட்டங்களை மறு வரையறை செய்ய வேண்டும், புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். நிர்வாகம் அப்போது சிறப்பாக நடைபெறும் என்ற தொனியில் அமைந்திருந்தது அந்த அறிக்கை. இப்படியாக தமிழக அரசு இப்படியாக நல்லவை சிலவற்றை செய்ய வேண்டும் என்று அவரது அறிக்கைகள் கோபத்தோடு கூற ஆம்பித்துள்ளன.
வேறு மார்க்கத்தில் அன்புமணி
இவரது அறிக்கைகள் இப்படி என்றால் அன்புமணியின் அறிக்கைகள் வேறு விதமாக இருக்கின்றன. 13% விழுக்காடு மதிப்பெண் பெற்றால் +2 வில் கூட தேற முடியாது ஆனால் நீட் தேர்வில் பெற்ற 13% விழுக்காடு மதிப்பெண்களோடு மர்த்துவம் படிக்க முடிகிறது என்றெல்லாம் புள்ளி விவரங்களை அடுக்கிய அன்புமணியின் அறிக்கை மத்திய அரசு இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று மத்திய அரசை சாடுவதோடு தமிழக அரசையும் ஒரு பிடி பிடித்துள்ளது அதாவது மத்திய அரசு இதை செய்யத் தவறும் பட்சத்தில் நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு மனுவை தாக்கல் செய்து நீட் தேர்வை அகற்ற வேண்டும் என்று முடிகிறது.
இன்னும் மோசமாகும்
ஏற்கனவே தேர்தலுக்கு முன்னர் செய்திருந்த ஒப்பந்தப்படி ராஜ்யசபா சீட் கொடுக்க முடியாது என்பதை இன்னும் அதிமுக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்படி ஒரு அறிவிப்பு வரும்பட்சத்தில் ராமதாஸ் அதிமுகவுக்கு எதிராக தனது கடுமையான தாக்குதலை தொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே விரைவில் அதிமுக பாமக கூட்டணி முறிவு என்ற செய்திக்கும் விரைவில் வேலை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.