அம்மாவின் வாரிசு ஓபிஎஸ்.. வருங்கால முதல்வர் ஈபிஎஸ்.. அதிமுக ஆபீஸ் வெளியே மாறி மாறி கோஷம்.. பரபரப்பு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு கூடுவதற்கு முன்பு இன்று நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் வந்தனர்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியுடன் கடந்த மாதம் பெரிய அளவில் விவாதம் நடந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இணைந்தே அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ்...? முதலமைச்சர் வேட்பாளர் இ.பி.எஸ்...? முடிவுக்கு வரும் மோதல்..!
அதிமுக
இந்த நிலையில் அடுத்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வருகிறார் என்று சிறைத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அதிமுக மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள்
இன்று நடக்கும் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுச்செயலாளர்
முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவுக்கு சிக்கல் எழுந்தபோது சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இவர் பதவியேற்க இருந்த நிலையில் சிறைக்குச் சென்றார். இதற்கு முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளராக இவரை அதிமுக தேர்வு செய்தது. இதுதொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
முதல்வர் யார்
இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக பன்னீர் செல்வமும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியும் கட்சியினரால் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், முன்பு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சசிகலாவின் நிலை என்ன, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால், கட்சியை அவர் கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி
அதிமுகவில் பொதுச் செயலாளருக்குத்தான் அதிக அதிகாரம் என்பதால், இந்தப் பதவி யார் கைக்கு செல்லும் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. சசிகலாவால்தான் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியும் என்ற கருத்தும் பரவலாக கட்சிக்குள் எழுந்து வருகிறது.
விவாதம்
தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதத்திற்கு பிறகு இன்று இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
அதிமுக அலுவலகம்
இன்று தலைமை அலுவகத்துக்கு இருவரும் வந்தபோது இருவரின் ஆதரவாளர்களும் தனித்தனியாக கோஷம் எழுப்பினர். பன்னீர் செல்வம் வந்தபோது அங்கு கூடியிருந்த அவர்களது தொண்டர்கள் ''அம்மாவின் வாரிசு ஓபிஎஸ், வருங்கால முதல்வர் ஓபிஎஸ்'' என்று கோஷம் எழுப்பினர். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தபோதும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். தேர்தலுக்கு முன்பு பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.