கொடநாடு விவகாரத்தில் பொய் சொன்னால் 7 வருஷம் ஜெயில்.. ஸ்டாலினுக்கு கிலியூட்டிய கே.பி. முனுசாமி
சென்னை:கொடநாடு விவகாரத்தில் தவறான கருத்தைச் சொன்னால் 7 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என்று அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு வீடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11ம் தேதி வெளியிட்டார்.அதில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணம், கொள்ளை சம்பவங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அந்த வீடியோவில் சயன், மனோஜ் ஆகியோர் பேட்டியளித்திருந்தனர்.
இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , டி.ஆர்.பாலு,கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா ஆகியோர் சந்தித்தனர். அந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. கொடநாடு எஸ்டேட் வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் அவர்கள் மனு ஒன்றையும் அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த அஇஅதிமுக தரப்பு
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் அஇஅதிமுக எம்பி வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். சந்திப்பு முடிந்த பின்னர் அஇஅதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
குற்ச்சாட்டில் உண்மையில்லை
அப்போது அவர் கூறியதாவது:கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது என்பதை உறுதியாக உணர்ந்த ஸ்டாலின், எப்படியாவது மக்களிடம் செல்வாக்கு பெற்ற நல்லாட்சியைக் குலைக்கும் வகையில் முதல்வரின் புகழைக் குலைக்கும் வகையில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் ஆதாயம்
ஸ்டாலின் அளித்த மனு அரசியல் ஆதாயத்திற்காக அளிக்கப்பட்டது என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மிகவும் சாதகமான பதிலைக் கூறியுள்ளார்.அரசியல் ஆதாயத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்.
திமுகவுக்கு தோல்விதான்
வருகின்ற லோக்சபாத் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது. அதை உறுதியாக உணர்ந்த ஸ்டாலின், முதல்வரின் புகழை குலைக்கும் வகையில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
சசிகலாதான் சொல்லவேண்டும்
கொடநாடு பங்களாவில் 2000 கோடி இருந்தது என்பது எப்படி முதல்வருக்கு தெரியும்? கொடநாடுவில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் கூற வேண்டும். ஸ்டாலின் அளித்த மனு அரசியல் ஆதாயத்திற்காக அளிக்கப்பட்டது என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மிகவும் சாதகமான பதிலை கூறியுள்ளார்.
7 ஆண்டுகள் சிறை
ஆளுநரிடம் நாங்களாகவே வந்து உண்மை நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை அவர் அழைக்கவில்லை. கொடநாடு விவகாரத்தில் நிச்சயம் ஸ்டாலின் அவமானப்படுவார். தோல்வியைச் சந்திப்பார். இந்திய தண்டனைச் சட்டப்படி கொலைக்குற்றம் தொடர்பாக தவறான கருத்தைச் சொன்னால் 7 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.