10 கோடி விளம்பர பாக்கி.. கடுப்பான ஓபிஎஸ், இபிஎஸ்.. சீட் கிடைக்குமா.. கலக்கத்தில் நிர்வாகிகள்
சென்னை: நமது அம்மா நாளிதழுக்கு ரூ.10 கோடி விளம்பரப் பாக்கியை கட்டினால் மட்டுமே சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் அதிமுக தலைகளிடம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கறாராக உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற போகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுகவில் சீட் பெற அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
இந்திய மொழிகளின் 'அம்மா' தமிழ்... ஜல்லிகட்டு காளை போல பங்கு சந்தை.. ராஜ்நாத்சிங் கலக்கல் பேச்சு
விளம்பரம்
அவர்களில் பலர் நமது அம்மா நாளிதழுக்கு விளம்பர பாக்கியை கட்டாமல் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் விளம்பர பாக்கியை கட்டுமாறு கறாராக உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்சி நாளிதழ்
அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரில் புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழ் இயங்கி வருகிறது. கட்சி சார்ந்த நடவடிக்கைகள், அறிவிப்புகள், கொள்கைகள் ஆகியவை அதில் தான் வெளியாகி வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பது, தினசரி அதிமுகவின் சாதனைகளை வெளியிடுவது, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பதிலடி கொடுப்பது போன்றவை நமது அம்மா நாளிதழில் பிரதானமாக வெளியாகும்.
விளம்பர பாக்கி
அந்த நாளேட்டில், அதிமுக சார்ந்த கட்சி விழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், பொறுப்பேற்பு நிகழ்ச்சிகளின் போது தங்களது விளம்பரங்களை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வெளியிடுவது வழக்கம் ஆனால், தங்களது கட்சி சார்பில் வெளியாகும், நாளிதழில் தாங்கள் கொடுத்த விளம்பரங்களுக்கான கட்டணங்களை கட்சி நிர்வாகிகள் சரியாக செலுத்துவதில்லை என்ற புகார்கள் உள்ளது.
ஓபிஎஸ் இபிஎஸ் கறார்
அதிமுக நிர்வாகிகள் விளம்பர பாக்கியாக ரூ.10 கோடி வரைக்கும் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. . இந்த தகவல் ஓ.பி.எஸ்- எடப்பாடி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம் இதனையடுத்து அவர்கள் இருவரும்,''இந்த விளம்பரப்பாக்கி தொகையை முழுமையாக கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட்டும், பதவியும் கொடுக்கப்படும். என்றும் பாக்கி வைத்துள்ளவர்களிடம் கறாராக நடந்து கொள்ளுங்கள்''என உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.