அதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்! கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி
சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுகவினர், முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சமாதியை பார்த்து கும்பிட்டு விட்டு செல்கின்றனர்.
கருணாநிதி நினைவிட பகுதியில், அதிமுக கரை வேட்டி கட்டிய ஆண்களும், அதிமுக கரை புடவை கட்டிய பெண் தொண்டர்களும் குவிந்து இருப்பது இதுவரை பார்க்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.
அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி. எனவே திமுக மற்றும் அதிமுகவினர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு வைத்துக் கொள்வது கூட கிடையாது.
தனி ரயில் புக் செய்திருந்தாரே
இரு தலைவர்களும் மறைந்த பிறகு இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே சற்று இணக்கமான நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் இன்றும் ஒரு சம்பவம் நடந்தது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு தமிழக அரசு பிரமாண்ட ஏற்பாடு செய்திருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை திறந்து வைத்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு தனி ரயில் முழுக்க புக் செய்து அதிமுகவினரை மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தார்.
யூ டர்ன் போட்டனர்
மெரினா கடற்கரையில் பார்க்கும் இடங்களெல்லாம் அதிமுகவினர் தலைகள் தெரிந்தன. கடல் இந்தப்பக்கம் வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு கூட்டம் இருந்தது. இதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா நினைவகத்தை திறந்து வைத்து முதல்வர் உரையாற்றும் வரைதான். விழா முடிந்ததும் அப்படியே யூ டர்ன் போட்டு அதிமுக தொண்டர்கள் கருணாநிதி சமாதி அமைந்துள்ள பகுதிக்கு வந்து விட்டனர்.
எம்ஜிஆர் நண்பர்
இரண்டும் மெரினாவில் அருகருகே இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். சமாதியை சுற்றி வந்து கும்பிட்டனர் சில அதிமுகவினர். இது பற்றி சில அதிமுக தொண்டர்களிடம் கேட்டபோது, எம்ஜிஆர் காலத்திலிருந்தே கருணாநிதி அவருக்கு நண்பராக இருந்தவர். எம்ஜிஆருக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருந்தவர். எனவே கருணாநிதி சமாதியை பார்த்து மரியாதை செலுத்தினோம் என்று தெரிவிக்கிறார்கள்.
கருணாநிதி சமாதி
சில தொண்டர்கள் கூறும்போது, சென்னைக்கு வந்தோம்.. அப்படியே இங்கு உள்ள பிரபல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்து கருணாநிதி சமாதிக்கும் வந்தோம் என்கிறார்கள். முதல்முறையாக இத்தனை அதிமுகவினரை ஒரே நேரத்தில் கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது. வழக்கமாக திமுக தொண்டர்கள் கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து வணங்கி விட்டு செல்வது வழக்கம். இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அஞ்சலி செலுத்தியதை கூட நாம் பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக அதிமுக தொண்டர்கள் திரளாக கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.