ஓபிஎஸ்க்கு அதிகரித்த ஆதரவு.. மரியாதை கொடுக்கும் அமைச்சர்கள்.. மாறியது எப்படி
சென்னை: அதிமுக ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சுக்கு பின்னர் அமைச்சர்கள் திடீரென மரியாதை அளிக்க தொடங்கியுள்ளனர், அவருக்கு ஆதரவும் அதிகரித்துள்ளது.
அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் கடந்த 18ம் தேதி (வெள்ளி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் பேசும் போது 'பொதுக்குழுவில் அறிவித்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வழிகாட்டு குழுவை அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. .
அப்போது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, 'இப்போது அந்த குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்தாராம். இதை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'கட்சியில் தனக்கு மரியாதை இல்லை' என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை கூறியதாக கூறப்படுகிறது. அமைதியாக இருந்து வந்த ஓபிஎஸ் அதிமுக கூட்டங்களில் இதுவரை அப்படி பேசியதே இல்லையாம். இதனால் துணை முதல்வரின் பேச்சை பார்த்து கட்சி நிர்வாகிகள் ஆடிப்போய்விட்டார்கள்.
பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு!
கட்சிக்குள் நெருக்கடி
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள். இரு தரப்புமே இப்படி நெருக்கடி தந்த நிலையில் தான் அதிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக பேசினாராம். கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வழிகாட்டு குழுவை அறிவிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் கூறிய விவகாரம் வருகிற 28ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.
ஒ பன்னீர்செல்வத்திற்கு மரியாதை
இந்த சூழலில் அண்மையில் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 3,501 அம்மா நகரும் நியாயவிலை கடைகள் தொடக்க விழா நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகரும் நியாயவிலை கடைகளை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் தனித்தனியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்து பெற்றார்கள். வழக்கமாக இதுபோன்று அரசு விழாக்கள் நடைபெறும்போது, முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து துறை அமைச்சர்கள் வாழ்த்து பெறுவார்கள். இந்த புகைப்படங்கள் தான் செய்தித்துறை சார்பில் பத்திரிகைகளில் வெளியாகும்.. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற படங்கள் வெளியானது.
பிறகட்சி நிர்வாகிகள்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார், கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர்கள் திடீர் மரியாதை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்தனர். இதுபற்றி தகவலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரில் உள்ள டுவிட்டர் பதிவில் வெளியாகி இருநதது. இருவரும், தங்கள் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் என்ற ஒரே கருத்தை பதிவு செய்திருந்தனர்.
ஒபிஎஸ் திடீர் அதிரடி
இதற்கிடையே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்றார். 28ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. முதல்வர் இல்லாத நேரத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் திடீர் அதிரடி அதிமுக நிர்வாகிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.