ஒத்த ஆளை அடக்க 10 பேரு.. அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை அடக்கி, முடக்க.. அதிமுக அதிரடி!
செந்தில் பாலாஜியை தோற்கடிக்க அதிமுக அமைச்சர்கள் புது வியூகம் அமைத்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: மொத்தம் 22 தொகுதியில் இடைதேர்தல் நடக்க போகிறது என்றாலும், அரவக்குறிச்சியில் மட்டும் அதிமுக தலைமையின் மொத்த கவனமும் உள்ளதாம்!
அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி திமுக சார்பாக களம் இறங்கி உள்ளார். இவர்தான் வேட்பாளர் என்றதுமே அதிமுக, அமமுக தரப்பினருக்கு அடிவயிற்றில் பகீர் வந்திருக்கவே செய்யும்.
செந்தில்பாலாஜி முன்பு யாரை கொண்டு போய் வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் காணாமலே போய்விடும் அளவுக்கு தொகுதியில் செல்வாக்கு நிறைந்தவர்! அதனால்தான் இப்போது அதிமுக இதில் மெனக்கெட்டுள்ளது.
ஒரே சமூகம்
இதற்கு முதல் காரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி இதுவாகும். இரண்டாவதாக, ஒரு ஒன்றியத்திற்கு ஒரு அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் என நியமித்துள்ளார். மூன்றாவதாக, வேட்பாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எல்லோருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஏகப்பட்ட நெருக்கடிகள், நிர்ப்பந்தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு ஆளாகி உள்ளார்.
விஜயபாஸ்கர்
இதற்காக இந்த தொகுதிக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன், உட்பட 10 அமைச்சர்கள் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்களாம்! அதிலும் செந்தில்பாலாஜி மீது கொஞ்சம் ஓவர் கடுப்பில் இருப்பவர் உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கர்தான்! அதனால் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க அதிக சிரத்தை எடுத்து வருகிறார்.
அதிருப்தியாளர்கள்
அது மட்டும் இல்லை, செந்தில்பாலாஜியின் மறைமுக எதிரிகள், அதிருப்தியாளர்கள் யார் என்பதையும் கண்டு அவர்களிடம் பேச காய் நகர்த்தி வருகிறார். குறிப்பாக திமுக பக்கம் செந்தில் பாலாஜி சென்றுவிட்டதால், அமமுகவில் யாராவது அதிருப்தியாளர்கள் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பதையும் கணக்கு போட்டு வருகிறார்!
உள்ளடி வேலை
மேலும், போனமுறை அரவக்குறிச்சி தேர்தலில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியிடம் தற்போதைய வேட்பாளர் செந்தில்நாதன் தோல்வியடைய காரணமாக இருந்தவரே செந்தில் பாலாஜிதான் அதிமுகவின் எண்ணம். அவரது உள்ளடி வேலையால்தான் செந்தில்நாதன் சொற்ப ஓட்டுகளில் தோல்வியை தழுவினார் என்பதையும் அதிமுக மறக்கவில்லை.
தீவிர திட்டம்
அதனால்தான் "செந்தில் பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த, நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று அமைச்சர் விஜயபாஸ்கரே செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார். இது எல்லாவற்றிற்கும் மேலாக, செந்தில் பாலாஜி பசை உள்ள பார்ட்டி.. எப்படியும் தொகுதிக்குள் ஏராளங்களும், தாராளங்களும் காட்டப்படும். அந்த சமயத்தில் கையும் களவுமாக பிடிக்கவும் இந்த 10 பேர் கொண்ட குழு திட்டம் தீட்டியுள்ளதாம்.
எத்தனை பேர் திரண்டு வந்தால் என்ன.. ஜெயிக்க போறதுதான் நான்தான் என செந்தில் பாலாஜி கெத்தாக சொல்கிறாராம்!