வாயை வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டாரா.. ஏன் இப்படியே பண்ணிட்டிருக்கார்.. வெடிக்கும் கொந்தளிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் புகார் கூறியுள்ளார்
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொந்தக் கட்சிக்குள்ளேயே கோபமும், கொந்தளிப்பும் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இத்தனைக்கும் காரணம் அமைச்சரின் செயல்பாடுகள்தான்.
யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறார்.. வாய்க்கு வந்தபடி பேசி விடுகிறார்.. சொந்தக் கட்சிக்காரர்களைக் கூட அவர் மதிக்காமல் மிரட்டும் வகையில் பேசுவதெல்லாம் மறைந்த ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயரையே சேர்க்கும் என்றும் சொந்தக் கட்சிக்காரர்களே வருத்தப்படுகிறார்கள்.
ஆனால் ராஜேந்திர பாலாஜி இதையெல்லாம் பற்றிக் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. மாறாக, எடப்பாடியார் புகழ் பாடியபடி ஜாலியாக தான் இருந்து வருகிறார்.
ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தள்ளிவிடலை..தவறி விழுந்தாரு..பாஜகவின் குரலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டுபட்டபோது ஓபிஎஸ் பக்கம் போகாமல் சசிகலா தரப்புடன் நெருக்கமாக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. பின்னர் சசிகலா ஜெயிலுக்குப் போனதும் டக்கென எடப்பாடியார் பக்கமே செட்டிலாகி விட்டார். அன்று முதல் அவருடன் நன்றாக செட்டாகி விட்டார். எப்போதும் எடப்பாடியார் புகழ்தான் பாடிக் கொண்டிருக்கிறார். இதனால் ராஜேந்திர பாலாஜி பக்கம் முதல்வரும் பாசப் பார்வையுடன்தான் இருந்து வருகிறார்.
துள்ளாட்டம்
எடப்பாடியார் தன் மீது பாசமாக இருப்பதையும், நம்பிக்கை வைத்திருப்பதையும் வைத்து ரொம்பவே துள்ளாட்டம் போட ஆரம்பித்து விட்டார் ராஜேந்திர பாலாஜி. அடுத்த முதல்வரும் எடப்பாடியார்தான், நிரந்தர முதல்வர் அவரே என்று அவர் கொளுத்திப் போட கடுப்பாகி விட்டது ஓபிஎஸ் தரப்பு. அதன் பிறகுதான் இந்த முதல்வர் வேட்பாளர் என்ற பஞ்சாயத்தே வெடித்துக் கிளம்பியது. கடைசியில் ஓபிஎஸ்ஸே தனது வாயால் முதல்வரை அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டியதாகி விட்டது.
மிரட்டல்
இந்த நிலையில் புதிய பஞ்சாயத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளார் ராஜேந்திர பாலாஜி. அது தனது கட்சி எம்எல்ஏவையே மிரட்டிப் பேசியதாக பரபரப்பாகியுள்ளது. சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏதான் ராஜவர்மன். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும், அமைச்சருக்கும்தான் தற்போது உரசலாகியுள்ளது. அமைச்சர் தன்னை கூலிப்படை வைத்துக் கொல்வேன் என்று பகிரங்கமாக மிரட்டுகிறார் என்று கூறி நெருப்பை மூட்டியுள்ளார் ராஜவர்மன்.
ராஜவர்மன்
ஆனால் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களோ, அமைச்சர் எதார்த்தமாக பேசக் கூடியவர். தான் என்ன பேசுகிறோம் என்று கூட அவருக்குத் தெரியாது. வாய்க்கு வந்ததைப் பேசி விடுவார். அதையெல்லாம் போய் யாராவது சீரியஸாக எடுத்துக் கொள்வார்களா. அவரது இயல்பே அதுதானே. இதைப் போய் ஏன் ராஜவர்மன் பெரிதாக்கி பிரச்சாரம் பண்ணுகிறார் என்று தெரியவில்லை என்று ஆதரவுக்கு வருகின்றனர். ஆனால் அமைச்சர் தனக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து ராஜவர்மன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மிரட்டல்
"எனது அப்பா அந்தக் காலத்திலேயே பெரிய பணக்காரர். நானும் இந்தக் கட்சியில் உழைத்துத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பிச்சை எடுத்து வாழும் நிலையில் நான் இருந்ததில்லை. நல்லவசதியான குடும்பத்துக்காரன்தான். அமைச்சரின் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை" என்று ராஜவர்மனும் பதிலுக்கு சவால் விட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் விருதுநகர் மாவட்ட அதிமுக கலகலத்துப் போய்க் கிடக்கிறது.
வாக்குகள்
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் நான்கு தொகுதிகளில் கடந்த தேர்தலில் திமுக வென்றது. 3ல் மட்டுமே அதிமுகவுக்குக் கிடைத்தது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக எத்தனையில் வெல்லும் என்பது யாராலுமே கணிக்க முடியாததாக உள்ளது. அதேசமயம், 7 தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். ஏன் அதிமுகவினரே கூட அதுதான் நடக்கும் என்றும் சோகத்துடன் சொல்லிக் கொண்டுள்ளனர். காரணம் அந்த அளவுக்கு கட்சியை காலி செய்து வைத்துள்ளனர் நிர்வாகிகள். தொண்டர்களுக்கும் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் உள்ளது.
மதிமுக
இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட ராஜவர்மன் ஆர்வமாக உள்ளார். ஆனால் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்று சொல்கிறார்கள். அதை விட முக்கியமாக அத்தொகுதியில் மதிமுக போட்டியிடப் போகிறதாம். அதிலும் வைகோவின் மகனே வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகவும், ஒரு பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. அப்படி நடந்தால் அதிமுக வெற்றி கேள்விக்குறிதான் என்று சொல்கிறார்கள். இதனால்தான் ராஜவர்மன் டென்ஷனாகி, அமைச்சரவை தேவையில்லாமல் சீண்டுவதாக அமைச்சர் தரப்பு சொல்கிறது.
ஒற்றுமை
ஆனால் ராஜவர்மன் தரப்போ, அமைச்சர் தனது ஆதரவாளர்களை விட்டு என்னை கேவலப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். என்னை பற்றி அவருக்குத் தெரியாது. தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்து போட்டியிட்டு வெற்றியைப் பெறுவோம் என்று ஒற்றுமையாக இல்லாமல் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறார்களே என்று அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தலையில் அடித்துக் கொண்டு குமுறுகின்றனர்.