முடிந்தது அதிமுக கூட்டம்.. இந்த ஒரு விஷயத்துக்காக 'வெள்ளைக்கொடி' காட்டி கலைந்த மா.செ.க்கள்
Recommended Video
சென்னை: தேர்தல் தோல்வியால் வருத்ததில் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொடி உயர்த்தினர் . இதன் காரணமாக இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புயல் கிளம்பியது. ஆனால் ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் அவற்றை இழந்துவிடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டுள்ள அதிமுக நிர்வாகிகள், உள்ளுக்குள் பிரச்னைகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக கலைந்து சென்றார்கள்.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்தன. இதற்கு அதிமுகவில் உள்ள உள்கட்சி பூசல் தான் காரணம் என்று நிர்வாகிகளுக்குள் வருத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தவறு இழைத்தவர்கள் மீது உறுதியான முடிவு எடுக்க இரட்டை தலைமை சரிவராது என கூறி ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
தனித்தனியாக செயல்பாடு
மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரன் உள்பட பலர் வெளிப்படையாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி குரல் எழுப்பி வருகிறார்கள். இதேபோல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என தனித்தனியாக செயல்படுவதையும் அதிமுக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை.
நடவடிக்கை இல்லை
இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் வெளிப்படையாக தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் உள்ளனர்.
ராயப்பேட்டையில் கூட்டம்
இதனிடையே தேர்தல் தோல்வி மற்றும் ஒற்றை தலைமை விவாகரம் உள்பட கட்சியில் நிலவும் பூசல்களுக்கு தீர்வு காணும் விதமாக இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இன்ற காலை 10மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கிய கூட்டம் மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது.
யாருக்கு பச்சைக்கொடி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் , எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி, குடும்ப அரசியல், ஜாதி ரீதியான முக்கியத்துவம் மற்றும் ஒற்றை தலைமைக்கான தேவை உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்துள்ளனர். இதில் கட்சியை நிர்வகிக்க 12 பேர் குழு அமைக்கலாமா அல்லது கட்சியில் இரட்டை தலைமை தொடரலாமா என்பது உள்பட பலவிஷயங்கள் ஆலோசித்துள்ளார்கள்.
கவனமாக இருக்கிறார்கள்
ஆனால் ஒரு விஷயத்தில் இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். ஆம் கூட்டம் முடிந்த பிறகு யாருமே ஊடகங்களில் வாயை திறக்கவில்லை. அப்படியே அமைதியாக சென்றுவிட்டார்கள். இந்த கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடத்ததை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டுள்ளனர். இப்போதைக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருமே பிரச்னையை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர். இதேபோல் தான் அனைவரும் உள்ளார்கள். பிரச்னையை தேடி தேடி உருவாக்கினால் ஆட்சி அதிகாரம் இவர்களிடம் இல்லாமல் போய்விடும் என்பதை அனைவரும் உணர்ந்து இருப்பதை இந்த கூட்டத்தின் முடிவு காட்டுகிறது