பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்ததாக புலம்பும் எம்எல்ஏக்கள்.. ஆனால் குரல் கொடுக்க தயக்கம்.. ரத்தினசபாபதி
Recommended Video
சென்னை: அதிமுக, பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இது பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு பிடிக்கவில்லை என அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறியுள்ளார்.
தமிழக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, இரு அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் எம்.எல்.ஏக்கள் இரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ரத்தினசபாபதி கூறுகையில் ஜெ வின் உண்மையான தொண்டர்கள் நாங்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் கட்சிக்குள் ஏற்பட்டன.
ஜெயலலிதாவுக்கு பின் ஆட்சியை எப்படி தொடர வைப்பது என யோசனை சொன்னதால் தான் எங்களுக்கு இந்த நிலை. ஆனால் கட்சியை எதிர்த்த ஓபிஎஸுக்கும் துணை முதல்வர் பதவி, மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சியை காப்பாற்ற முயன்ற எங்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ். அதை நீதி தேவதை தடுத்துள்ளது. பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருக்கிறது. இது பெரும்பாலான எம்.எல்.ஏக்களுக்கு பிடிக்கவில்லை. அதிமுகவை அடகு வைத்ததாக மற்ற எம்எல்ஏக்கள் சங்கடப்படுகின்றனர்.
ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி
தனிமையில் பேசும் போது வருத்தப்படுகிறார்களே தவிர, கூட்டாக குரல் கொடுக்க தயங்குகின்றனர் .
எம்.எல்.ஏ பிரபுவின் நிலைபாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து கலைச்செல்வன் பேட்டி கூறுகையில் ஜெயலலிதா யாரை விரும்பினார்கள் என மக்களுக்கு தெரியும். ராஜேந்திரனுக்கு 6-வது இடம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் மாண்பை மீறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு சம்பந்தம் இல்லாத மாபா. பாண்டியராஜனுக்குக் கூட உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.