3 மணி நேரம்.. அனல் பறந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. ஓபிஎஸ் "தனி அறிக்கை.." எதிரொலித்த வாழ்க கோஷம்
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தில், எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொறடாவாகா எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல பரபரப்புகள் அரங்கேறின.
Recommended Video
சில தினங்கள் முன்பு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்த கூட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 14ஆம் தேதி, நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-ஐ கிண்டல்செய்தால்.. வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.. அன்புமணிக்கு அதிமுக எச்சரிக்கை
எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அனுமதி
கூட்டத்தில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூட்டம் நடைபெறும் தினத்தன்று தலைமை அலுவலகத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்களை தவிர வேறு யாரும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொறடா பதவி
கூட்டத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளருக்கு கொறடா பதவி தரக் கோரிக்கை விடுப்பார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. குறிப்பாக மனோஜ் பாண்டியனுக்கு அந்த பதவியை தர விரும்பினார். தேர்தலுக்கு முன்பாக, முதல்வர் வேட்பாளர் தேர்வின்போது தனக்கு அந்த சான்ஸ் வர வேண்டும் என்றார் ஓபிஎஸ். எடப்பாடி விடவில்லை. இதனால் தேனியில் சென்று சில நாட்கள் முகாமிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் பிளான்
அதேநேரம் கட்சி நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்றதால், ஓபிஎஸ் தன் வாயாலேயே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிய வேண்டியதாயிற்று. தேர்தலில் அதிமுக தோற்றதால் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தது. அந்த பதவியை பெறவும் ஓபிஎஸ் எவ்வளவோ முயற்சித்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை.
பரபரப்பு
நம்பர் 2 என்ற அந்தஸ்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரிடம் தொடர்ந்து குமுறி வருகிறார்களாம். கட்சி ஓருங்கிணைப்பாளர் பதவியும் சில காலம் கழித்து எடப்பாடியிடம் போக வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் காதில் கிசுகிசுக்கிறார்களாம். எனவே, எதிர்க்கட்சி தலைவரையும் ஆட்டுவிக்கும் கொறடா பதவியை தனது ஆதரவாளருக்குத்தான் தர வேண்டும் என கோரியுள்ளார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடி தரப்பு ஏற்கவில்லை. சுமார் 3 மணி நேரம் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இந்த இழுபறிதான் காரணமாக இருந்துள்ளது.
ஓபிஎஸ் தனி அறிக்கை
அதேநேரம், சட்டமன்ற அதிமுக துணை செயலாளராக பி.எச்.மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்படுவார் என்று கூறிவிட்டதாம் எடப்பாடி தரப்பு. இந்த நிலையில்தான், மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, ஓபிஎஸ் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பன்னீர்செல்வம் பெயர் மட்டும்தான் இடம்பெற்றிருந்தது. எடப்பாடி பழனிசாமி பெயர் இடம்பெறவில்லை. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஓபிஎஸ் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் எதற்கும் அசரவில்லை எடப்பாடி தரப்பு. அவர்கள் தரப்பு கைதான், பொறுப்பாளர்கள் நியமனத்தில் ஓங்கியிருக்கிறது.
வாழ்க கோஷங்கள்
முன்னதாக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தபோது, எடப்பாடியார் வாழ்க என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். அதேபோல ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தபோது, பன்னீர் செல்வம் வாழ்க என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இப்படியான நிலையில்தான், மீட்டிங் நடந்தபோதே ஓபிஎஸ் பெயரில் அறிக்கை வெளியாகி பரபரப்பு நிலவியது.