ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி - அதிமுக மவுனம் ஏன்? ஸ்டாலின்
சென்னை: ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது குறித்து அதிமுக மவுனமாக இருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் டி. சத்தியேந்திரன் உருவப் படத்தை திறந்து வைத்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:
தமிழகத்தின் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் மட்டும் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமித்ஷாவின் நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி? நாளை மறுநாள் அதிமுக ஆலோசனை
ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் திட்டம்
அதுவும் முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் - விளை நிலங்களைப் பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அளிக்கப்பட்டு விட்டதால்- இப்போது ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் புகுத்துகிறார்கள்.
எதுவுமே சொல்லவில்லை
ஒரு கிலோ மீட்டர் அல்லது இரு கிலோ மீட்டர் அல்ல- மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டரில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படுகிறது . மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன் முதலமைச்சரோ- தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை.
உரிமைகள் தாரை வார்ப்பு
இப்படித்தான் அ.தி.மு.க. அரசும்- அதன் அமைச்சர்கள், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரும் தமிழக உரிமைகளைத் தாரை வார்க்கிறார்கள். தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து நிற்கிறார்கள்.
இரவு பகலாக பாடுபட வேண்டும்
தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் பின்னுக்குத் தள்ளிய இவர்களை அரசியலை விட்டே துறவறம் போக வைக்க திமுக தோழர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாகக் பணியாற்றிட வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்- அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட இதுதான் நம் கையில் கிடைத்துள்ள ஆயுதம். ஆகவே நீங்கள் எல்லாம் இன்னும் ஆறு மாதத்திற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.