கண் சிவக்கும் விஜய்.. ஹார்லிக்ஸ் பாட்டில் ரஜினிகாந்த்.. 'நமது அம்மா' நாளிதழ் கடும் விமர்சனம்
சென்னை: சர்கார் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' கடும் விமர்சனத்தை பரிசாக அளித்து உள்ளது.
சர்கார் திரைப்படத்தில், தமிழக அரசின் இலவச பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது போலவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறிய அதிமுகவினர், தீவிர போராட்டங்களை நடத்தினர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.
சர்கார்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. அதிர்ச்சியில் தினகரன்
|
நமது அம்மா நாளிதழ் கட்டுரை
இதுகுறித்து நமது நாளிதழில் குத்தீட்டி என்ற பகுதியில் கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. கிணறு வெட்டின ரசீதும், தணிக்கை சான்று ரஜினியும்.. என்ற தலைப்பில் இந்த விமர்சன கட்டுரை இடம்பெற்றுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எதிர்த்து போராடுவது நியாயமா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கலாய்க்கிறார்.
ஹார்லிக்ஸ் உதாரணம்
உச்ச நட்சத்திரமே உங்கள் உள்ளத்தை திறந்து சொல்லுங்க.. எல்லா சான்றிதழ்களும் முடிந்து வியாபாரத்திற்கு வந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை வீட்டுக்கு வாங்கி வந்து அதனை திறக்கும் போது அதன் உள்ளே ஒரு பல்லி, கிடந்தால் எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்ஸ்சை எடுத்துக்கொண்டு போய் கொட்டுவீர்களா, இல்லை சான்றிதழ்கள் சரியாகத்தான் இருக்கிறது என்று அதனை செத்து கிடக்கும் பல்லியோடு, அதுவும் சத்துதான் என்று பருகுவீர்களா.
தணிக்கை குழு
தணிக்கை குழுவுக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் கிடைத்து விட்டாலும், அல்லது தணிக்கை குழுவை தவறான தகவல்களோடு, அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு ஒரு மோசமான கருத்து, சினிமா என்கிற தலையாய ஊடகத்தின் வழியே பரப்பப்பட்டும்போது அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
விலையில்லா பொருட்கள்
நீதிமன்றம் கூட மக்களுக்கு விலையில்லாமல் தரப்படும் திட்டங்கள் சமூக நோக்கத்திலானது. அதற்கு எதிராக நாங்கள் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, என்று ஏற்கனவே தீர்ப்பே தந்திருக்கும் நிலையில், அரசின் முத்திரையிடப்பட்ட மிக்ஸியை கொண்டுபோய் நெருப்பில் போடுவது போல காட்சி அமைப்பதும், அதனையும் ஒரு தேசிய விருது பெற்ற மூத்த இயக்குனர் முன்னின்று செய்வது எவ்வகையில் நியாயம்.
வரி விலக்கு மட்டும் வேண்டுமோ
இலவசத்தை இழிவு செய்வது போன்று படம் எடுத்துவிட்டு பிறகு அவர்களே, வரி விலக்கு கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பம் போடுகிறார்களே, அது நியாயமா? சமூகத்தில் மேலோங்கி நிற்கும், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வை சமன் செய்வதற்கும், சமூகநீதிக்கான நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு போன்றதுதான் விலையில்லா பொருட்கள்.
விஜய், முருகதாஸ்
இன்றைக்கு கோடிகளில் புரளும் முருகதாசுக்கும், விஜய்க்கும், கருணாநிதி பேரன்களுக்கும் அரசு தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவை இழிவாக தோன்றலாம். ஆனால் கலை உலகில் கால்பதித்து வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுடன், கோடம்பாக்கத்து வீதிகளிலே அலை மோதிக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு அம்மா உணவகம் என்பது ஒருவகையில் தாய்மடி அல்லவா? மிக்ஸி, கிரைண்டர் என்பது இல்லாதோருக்கு இறைவனின் பரிசு போன்றதல்லவா? இவ்வாறு நீண்டு செல்லும் கட்டுரையின் முடிவில், ரஜினி, விஜய்க்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் கனவு
அரசுக்கு எதிராக கண் சிவக்க வசனம் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவில் மிதக்கும் நடிகர் விஜய்க்கும், சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற அரைவேக்காடு இயக்குனர் முருகதாஸுக்கும், திருவாளர் ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர, அதைவிடுத்து, கிணறு வெட்டும் ரசிது என்கிட்ட இருக்குதுன்னு, வடிவேலு காமெடியை போல தணிக்கை சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு சூப்பர் ஸ்டார் வக்காலத்து வாங்கலாமோ.. இவ்வாறு சொல்கிறது அந்த கட்டுரை.